காளியாக மாறி கணவரையும், குழந்தைகளையும் வதம் செய்தேன்.. ம.பி. பெண் கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்
போபால்: கணவர், இரு குழந்தைகளை குத்திக் கொலை செய்த பெண், தன்னை வதம் செய்யும் அம்மனாக கருதிக்கொண்டதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் சித்தி மாவட்டத்தை சேர்ந்த ரஜ்வா கோல் என்ற 30 வயது பெண்மணி, 2012ம் ஆண்டு மார்ச் மாதம், 3ம் தேதி தனது இரு குழந்தைகளையும், கணவரையும் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, தடுக்க முற்பட்ட 7 பேரையும் குத்தி காயப்படுத்தினார்.
அக்கம் பக்கத்தினற் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கீழ் நீதிமன்றம் மற்றும் ஹைகோர்ட் ஆகியவை அவரை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளன. ஆனால் ரஜ்வா கோல் தரப்பு வக்கீலோ அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இதனால், அவர் கொலை செய்தார் என்றும் கூறினார். அவர் வாதத்தை சுப்ரீம்கோர்ட் தற்போது ஏற்றுக்கொண்டு, விசாரணையை தொடங்கியுள்ளது.
மருத்துவமனையில் ரஜ்வா கோலை டாக்டர்கள் செக்-அப் செய்தபோது, அவர் நிலைதடுமாறியவராக இருப்பதாக கூறியுள்ளனர். துர்க்கையின் அம்சம் என தன்னை கூறிக்கொள்வதாகவும், எதிரிகளை வதம் செய்வேன் என அவர் கத்திக்கொண்டிருப்பதாகவும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.
சம்பவத்தன்று, மந்திரவாதி ஒருவர், ரஜ்வா கோலுக்கு சிகிச்சையளிப்பதாக கூறி பூஜை செய்தபோதுதான், அவர் கடும் கோபம் கொண்டு இக்கொலையை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.