பெண்களும் 'முத்தலாக்' சொல்லாம்... உச்சநீதிமன்றத்தில் இந்திய முஸ்லீம் தனி நபர் சட்டவாரியம் உறுதி
இஸ்லாமிய பெண்களும் மூன்று முறை தலாக் சொல்லி விவகாரத்துப் பெறலாம் என்று இந்திய முஸ்லீம் தனி நபர் சட்டவாரியம் உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
டெல்லி: இஸ்லாமியர்களில் இனி 'ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் முத்தலாக் முறையில் விவாகரத்து செய்ய நாங்கள் அனுமதிக்கிறோம்,' என்று, இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.
இந்தியாவில், முத்தலாக் முறையை ரத்து செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதேசமயம், இதனை எதிர்த்து, இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன்மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜேஎஸ் கேஹர் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, இதனை விசாரித்து வருகிறது. இதில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மற்றும் இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் வழக்கறிஞர் இஜாஷ் மெக்பூல் ஆகியோர் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறார்கள்.
உச்சநீதிமன்றத்தில் நேற்றைய விசாரணையின்போது, இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் வழக்கறிஞர் இஜாஷ் மெக்பூல் ஆஜராகி, தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், "முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யும் வழக்கம், கடந்த 1400 ஆண்டுகளாக, முஸ்லீம் மக்கள் பின்பற்றி வருகிறார்கள். அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பதை எப்படி இந்து மதத்தினர் நம்புகிறார்களோ, அதைப் போன்றே 'தலாக்' சொல்லி விவாகரத்து செய்வதை முஸ்லீம்களும் மரபாகப் பின்பற்றுகிறார்கள்.
'ஆண்கள் மட்டுமே, தலாக் சொல்லி விவாகரத்து செய்யலாம்' என எங்கள் சட்டம் சொல்லவில்லை. பெண்களும், திருமண உறவு பிடிக்காவிட்டால், தலாக் சொல்லி, விவாகரத்து செய்யலாம் என்றுதான் இந்திய முஸ்லீம்களுக்கான சட்டம் சொல்கிறது. இதனைப் பலர் புரிந்து கொள்ளவில்லை. பெண்களும், தலாக் சொல்லி, விவகாரத்து செய்வதை நாங்கள் அனுமதிக்கிறோம். இனிவரும் நாட்களில், இதனைப் பெண்கள் முழு அளவில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறோம்,'' என்று, இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய வழக்கறிஞர் இஜாஷ் மெக்பூல் தெரிவித்துள்ளார்.