மாதவிடாய் காலத்தின் முதல் நாள் விடுமுறை... மும்பை நிறுவனத்துக்கு பெரிய விசில் போடுங்க...
மாதவிடாய் காலத்தின் முதல் நாள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள மும்பை நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
மும்பை: மாதவிடாய் காலத்தின் முதல் நாள் அன்று பெண்கள் படும் சிரமங்களைத் தடுக்க தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் விடுப்பு எடுக்க அனுமதி அளிக்கிறது.
மாதந்தோறும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தின் போது அவர்கள் படும்பாடு சொல்லி தெரிய வேண்டியதில்லை. உடலாலும், மனதாலும் பெரும் துயரத்துக்கு ஆளாகும் காலகட்டம் அது.
அந்த நேரத்தில் வீட்டில் உள்ள பெண்களுக்கே மிகவும் கடினம். இதில் வேலைக்கு செல்லும் பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். சில பெண்கள் மாதவிடாய் கால வயிற்று வலியால் புழு போல் துடித்துவிடுவர்.
விடுப்பு கொடுக்க யோசனை
சாதாரணமாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டாலே, விடுப்பு எடுத்தவுடன் அவர் எப்போது வருவார் என்றுதான் கேட்பார்களே தவிர, உடல்நலம் நன்றாக உள்ளதா என்று கேட்கும் பழக்கம் வெகு சில நிறுவனங்களுக்கு மட்டுமே உள்ளது.
பெண்களின் துயரை புரிந்து கொண்ட நிறுவனம்
அவ்வாறிருக்கையில், மாதவிடாய் காலங்களில் பெண்களின் துயரை நன்கு புரிந்து கொண்டுள்ள நிறுவனம் ஒன்று அந்த காலத்தின் முதல் நாளில் விடுப்பு அளிக்கும் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. மு்ம்பையை சேர்ந்த கல்சர் மெஷின் என்ற டிஜிட்டல் மீடியா நிறுவனம்தான் அத்தகைய மாபெரும் சேவையை செய்கிறது.
மத்திய அரசுக்கு கோரிக்கை
இந்த விடுப்பு குறித்து கடந்த வாரம் அந் நிறுவனம் அறிவித்தது. இதை வரவேற்று அந்த நிறுவன பெண் ஊழியர்கள் பதிவு செய்த கருத்துகளின் வீடியோ பேஸ்புக் மற்றும் யூடியூபில் வைரலாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரும் புதிய விடுப்பு கொள்கை குறித்து அறிவிக்கும் கருத்துகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
ஆண்கள் சொல்ல...
புதிய விடுப்பு குறித்து அந்த நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், பல நேரங்களில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் உள்ளதால் விடுப்பு வேண்டுவதாகவும், பணியாற்றாமல் உட்கார்ந்துள்ளதாகவும் ஆண்கள் வந்து என்னிடம் கூறுவதை கேட்டுள்ளேன். உண்மையை சொல்ல போனால் நாம் பெண்களின் வலியை உணருவதில்லை. எனவே அவர்கள் அசௌகரியங்களை உணர்ந்து கொண்டு விடுப்பு அளிக்கிறோம் என்றார் அவர்.
மத்திய அரசுக்கும் கோரிக்கை
இதுபோன்ற புதிய விடுப்பு வழங்க முன் வந்துள்ள இந்த நிறுவனம், நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கும் மாதவிடாய் காலத்தின் முதல் நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிறுவனத்தை சமூகவலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர். பெண்களின் வலியை புரிந்து கொள்ள வேண்டும் என்ற இந்த நிறுவனத்தின் முயற்சியை நாமும் பாராட்டுவோம்.