பாலியல் தொல்லை விசாரணை காலத்தில் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை... மத்திய அரசு அதிரடி
மத்திய அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் பாலியல் தொல்லைக்குள்ளாக்கப்படும்போது அதற்கான விசாரணைக் காலத்தில் அவர்களுக்கு 90 நாள்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும்.
டெல்லி: மத்திய அரசு பெண் ஊழியர்கள் பாலியல் தொல்லைக்குள்ளாக்கப்பட்டால் விசாரணை காலத்தின் போது, அவர்களுக்கு 90 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக மத்திய அரசுப் பணியாளர் நலன் துறை அண்மையில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசில் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு பணியிடத்தில் தங்களது மேலதிகாரிகளால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பாலியல் புகார் தொடர்பாக அமைக்கப்படும் சிறப்பு விசாரணைக்குழுக்கள் புகாரின் பேரில் விசாரணை நடத்தி வரும் காலத்தில் மூத்த அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்களுக்கு மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றன.
இந்த மிரட்டல்கள் தொடர்பாக வந்த புகாரை அடுத்து பாலியர் புகார் தொடர்பான விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 மாதங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டும் என்று மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சகம் சமீபத்தில் பணியடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டது.
மேலும் இந்த விடுமுறையானது மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட விடுப்புக்கு கூடுதல் விடுப்பாகும் என்றும் அந்த விடுமுறைக் கணக்கிலிருந்து இந்த சிறப்பு விடுப்பு கழித்துக் கொள்ளப்படாது என்றும் தெரிவித்துள்ளது.