”வாழ்வாங்கு வாழ்ந்த அப்துல் கலாம்”- உலகத் தலைவர்கள் பலரும் அஞ்சலி!
டெல்லி: மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்தியா-அமெரிக்கா இடையேயான வானியல் ஆராய்ச்சி ஒத்துழைப்பிற்கு கலாம் பெரும் பங்காற்றியவர். இந்தியர்களின் உத்வேகம் கலாம்" என்று புகழ்ந்துள்ளார்.
தெற்காசிய இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்தவர் கலாம் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், லட்சக்கணக்கான மக்களுக்கு மட்டுமல்லாமல் தனக்கும் கலாம் உந்து சக்தியாக இருந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
சிறந்த நண்பரை நேபாளம் இழந்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா குறிப்பிட்டுள்ளார். கலாமின் மறைவு அறிவியல் சமுதாயத்திற்கு பேரிழப்பு என மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார். இந்தியாவின் குறிப்பிடத் தக்க குடியரசுத் தலைவராக, அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டவர் அப்துல் கலாம் என பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே புகழ்ந்துள்ளார்.
இதேபோல், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பும், சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியன் லூங்கும் அப்துல் கலாம் மறைவிற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.