தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி ஜனாதிபதிக்கு யாகூப் மேமன் புதிய கருணை மனு!
டெல்லி: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமன் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதிக்கு இன்று புதிய கருணை மனு அனுப்பி வைத்துள்ளார்.
1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி மும்பையில் அடுத்தடுத்து 12 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 257 பேர் இறந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவ்வழக்கில் யாகூப் மேமனு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும், பின்னர் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையே யாகூப் மேமனின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து கடைசி சட்ட நிவாரணமாக கருதப்படும் கியூரேட்டிவ் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 21-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து யாகூப் மேமனை நாக்பூர் மத்திய சிறையில் வரும் நாளை தூக்கில் இடுவதற்கான ஏற்பாடுகளை மகாராஷ்டிர அரசு மேற்கொண்டது.
இதனிடையே மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் யாகூப் மேமன் கருணை மனு தாக்கல் செய்தார். மேலும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் அவர் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு மீதான நேற்றைய விசாரணையின் போது, நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், யாகூப் மேமனுக்கு நாளை நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு கூடுதல் நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதிக்கு யாகூப் மேமன் மீண்டும் இன்று புதிய கருணை மனுவை அனுப்பியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை, ஜனாதிபதியின் முடிவு ஆகியவற்றைப் பொறுத்து யாகூப் மேமன் நாளை தூக்கிலிடப்படுவாரா? இல்லை தூக்கில் இருந்து தப்புவாரா? என்பது தெரியவரும்.