மும்பை சந்தன்வாடியில் உள்ள படா கபர்ஸ்தானில் யாகூப் மேமனின் உடல் அடக்கம்
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனின் உடல் சந்தன்வாடியில் உள்ள படா கபர்ஸ்தானை அடைந்துள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமன் நாக்பூர் மத்திய சிறையில் இன்று காலை தூக்கிலிடப்பட்டார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை அவரின் உறவினர்கள் 7 பேர் பெற்றுக் கொண்டனர்.
மேமனின் உடல் விமானம் மூலம் நாக்பூரில் இருந்து மும்பை கொண்டு வரப்பட்டது. அவரது உடல் மும்பை மாஹிம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. உடலை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். மேமனின் வீட்டுக்கு வெளியே ஏராளமான மக்கள் கூடியுள்ளனர்.
மேமனின் உடல் அவரது வீட்டில் இருந்து சந்தன்வாடியில் உள்ள படா கபர்ஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் கபர்ஸ்தானுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் மாஹிம் பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் சுமார் 450 பேரை கைது செய்துள்ளனர். மேமனின் உடலையோ அவரது இறுதி ஊர்வலத்தையோ புகைப்படமோ, வீடியோவோ எடுக்கக் கூடாது என்று மும்பை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.