யாகூப் மேமனின் தூக்கை ரத்து செய்யக் கோரிய மனு - தள்ளுபடி செய்த நீதிபதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு
மும்பை: யாகூப் மேமனின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரிய கடைசி மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யாகூப் மேமன் உச்சநீதிமன்ற உத்தரவின்படி நேற்று காலை 6 மணியளவில் தூக்கிலிடப்பட்டார்.
முன்னதாக யாகூப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தூக்கு தண்டனைக்கு ரத்து கோரும் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகளான தீபக் மிஸ்ரா , பிரபுல்லா சந்திர பண்ட் மற்றும் அமித்தவா ராய் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.
விடிய விடிய நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் மேமன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மேமன் தூக்கிலிடப்பட்டார். இந்த நிலையில் யாகூப் மேமனின் மனுவை தள்ளுபடி செய்த 3 நீதிபதிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி 3 நீதிபதிகளின் இல்லங்களிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்படுகிறார்கள்.