பசு குண்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது மத்திய அரசு.. சீதாராம் யெச்சூரி பரபரப்பு குற்றச்சாட்டு
பசுப்பாதுகாப்பு என்ற பெயரில், மத்திய அரசு குண்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி: பசு பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையினர், தலித் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோருக்கு மத்திய அரசு அடைக்கலம் அளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். இவர்களைக் குறிவைத்து செயல்படும் 'குண்டர்களுக்கு' பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் மத்திய அரசு அனுமதி அளிப்பதுடன் அடைக்கலமும் அளிப்பது தெளிவாக தெரிகிறது. மேலும் இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
இதுபோன்ற தனியார் படைகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். இவர்களுக்கு எதிராக சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும். குற்றவாளிகள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.
இதனிடையே, மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூர் மாவட்டம், பார்சிங்கி என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் பசு இறைச்சி வைத்திருந்ததாகக் கூறி ஒருவர் தாக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் அங்கு போலீஸார் விரைந்து சென்று தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.