கர்நாடகாவில் பாஜக ஜெயிச்சா எதியூரப்பாதான் முதல்வர்.. அறிவித்தார் அமித் ஷா
கர்நாடகா மாநில முதல்வர் வேட்பாளராக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவை பாஜக தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
டெல்லி: கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பி.எஸ்.எடியூரப்பா முதல்வராவார் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
குஜராத், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குஜராத், ஹிமாச்சல் மாநிலங்களில் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும், கர்நாடகா மாநிலத்தில் அடுத்த ஆண்டும் தேர்தல் நடைபெறுகிறது.
சமீபத்தில நடந்த உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த உத்வேகத்துடன் தேர்தல் நடைபெறும் இடங்களில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
அமித் ஷா பேட்டி
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். அந்த மாநிலத்தின் முதல்வராக உள்ள விஜய் ரூபானியை கட்சியின் முதன்மை பொறுப்பில் இருக்க வேண்டும் என்று கட்சி விரும்புகிறது.
கர்நாடக முதல்வர் வேட்பாளர்
அதே வேளையில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள ஹிமாச்சலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. கர்நாடகா மாநிலத்தை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் எடியூரப்பா முதல்வர் வேட்பாளரா என்று கேட்கிறீர்கள்.
எதியூரப்பா
மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றால் அவர் முதல்வராகலாம். கர்நாடகா மாநிலத்துக்கு விரைவில் சென்று தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளேன் என்றார் அவர்.
எதியூரப்பாவின் தீண்டாமை
தலித் வீட்டில் விருந்துக்கு சென்ற எடியூரப்பா அவர் வீட்டில் உணவு அருந்தாமல் ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவை அருந்தியதால் அவர் மீது தீண்டாமை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மாநில போலீஸில் இளைஞர் ஒருவர் புகார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.