ஏமனில் எந்த பக்கம் சென்றாலும் இடி: இவர்களுக்கு எல்லாம் என்ன வேண்டுமாம்?
டெல்லி: ஏமனில் இருந்த 4 ஆயிரம் இந்தியர்களை மீட்டதையடுத்து ஆபரேஷன் ராஹத்தை முடித்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் முயற்சியை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. இந்நிலையில் ஏமனில் சிக்கியுள்ளவர்கள் பற்றியும் பிறர் நினைக்க வேண்டும்.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் 10 தரப்பினர் உள்ளனர். ஏமனில் இருந்து மீட்கப்பட்டுள்ளவர்கள் அங்கு நடந்து வரும் போர் குறித்து திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.
ஏமனில் ஹவ்தி கிளர்ச்சியாளர்கள், ஹதி அரசு, முன்னாள் அதிபர் அப்துல்லா சாலேவின் ஆதரவாளர்கள், சன்னி பழங்குடியினத்தவர்கள், சவுதி, ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான கூட்டணி, அல் கொய்தா, ஐஎஸ்ஐஎஸ், ஈரான் மற்றும் அமெரிக்கா என்று பத்து தரப்பு உள்ளது. அவர்களுக்கு எல்லாம் என்ன வேண்டும்?
ஹவ்தி கிளர்ச்சியாளர்கள்
ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்லாமிய சட்டதை அமல்படுத்த போராடி வருகிறார்கள். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை வெறுக்கும் அவர்களுக்கு பிடிக்காதவர்கள் சன்னி முஸ்லீம்கள். சன்னி முஸ்லீம்களால் தான் தங்கள் பிரிவினரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று ஷியா முஸ்லீம்கள் கருதுகிறார்கள். ஷியா கிளர்ச்சியாளர்களுக்கு உலகிலேயே ஷியா முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஈரான் ஆதரவு அளித்துள்ளது.
ஹதி அரசு
அமெரிக்காவுக்கு வளைந்து கொடுப்பவர் என்று கூறப்படும் ஏமன் அதிபர் ஹதி ஹவ்தி கிளர்ச்சியாளர்களின் பகைமையை சம்பாதித்துள்ளார். ஷியா முஸ்லீம்களின் உரிமையை பறித்துவிட்டு சன்னி இஸ்லாத்தை பரப்புவதாக ஹதி மீது கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவருக்கு சவுதி மற்றும் அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. முதலில் ஹதி பக்கம் இருந்த வீரர்களில் பலர் தற்போது கிளர்ச்சியாளர்கள் பக்கம் சென்றுவிட்டனர்.
அப்துல்லா சாலே
2011ம் ஆண்டு நடந்த அரபு வசந்தத்தையடுத்து ஏமனை 30 ஆண்டுகளாக ஆண்ட அதிபர் அப்துல்லா சாலே தனது பதவியை இழந்தார். அவருக்கு ஏமன் போர் தனிப்பட்ட விஷயம். அவருக்கு ஏமன் ராணுவத்தின் ஆதரவு தற்போதும் உள்ளது என்பதை ஹவ்தி கிளர்ச்சியாளர்களும், சவுதியும் கவனிக்கவில்லை. உள்நாட்டு போரை பயன்படுத்தி மீண்டும் பதவிக்கு வர விரும்புகிறார் சாலே. ஏமன் ராணுவம் மூன்றாக பிரிந்துள்ளது. அதில் ஒரு பிரிவினர் சாலேவுக்கும், ஒரு பிரிவினர் ஹதிக்கும், ஒரு பிரிவினர் ஹவ்தி கிளர்ச்சியாளர்குக்கும் ஆதரவாக உள்ளனர்.
சன்னி முஸ்லீம்கள்
ஷியா, சன்னி பிரிவு மக்களுக்கு இடையே உள்ள பிரச்சனையை தங்களுக்கு ஏற்றது போல பயன்படுத்த விரும்புகிறார்கள் சன்னி பழங்குடியினத்தவர்கள். சன்னி பழங்குடியினத்தவர்களில் சிலர் அல் கொய்தாவுக்கும், பலர் ஹதிக்கும் ஆதரவாக உள்ளனர். தற்போது சில ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து உதவியும் வருகிறார்கள்.
சவுதி
அண்மையில் தான் ஏமன் பிரச்சனையில் சவுதி அரேபியா தலையிட்டுள்ளது. ஹவ்தி கிளர்ச்சியாளர்களை அழிப்பது தான் சவுதியின் நோக்கம். ஹதியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் சவுதியின் பங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 25ம் தேதி ஏமன் பிரச்சனையில் தலையிட்ட சவுதி ஹதி அரசை மீண்டும் கொண்டு வர நினைக்கிறது. ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளிப்பது சவுதிக்கு தெரியும். ஏமனில் ஈரான் எந்த முக்கியத்துவமும் பெறாமல் இருக்க வேண்டும் என நினைக்கிறது சவுதி.
ஹவ்திக்கு எதிராண கூட்டணி
சவுதி அரேபியா தலைமையிலான நாடுகள் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக திரும்பியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், சூடான், எகிப்து, ஜோர்டான், மொராக்கோ ஆகிய நாடுகள் சவுதியுடன் கைோர்த்துள்ளன. இந்த கூட்டணியில் பாகிஸ்தானும் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் தங்கள் நாட்டில் பிரிவினைப் போர் வந்துவிடும் என்ற பயத்தில் பாகிஸ்தான் ஒதுங்கி இருக்கிறது.
ஏமனில் வான்வெளித் தாக்குதல் நடத்தும் சவுதிக்கு கூட்டணி நாடுகள் ஆதரவளித்துள்ளன. சவுதி எப்பொழுது தரை வழிப் போரை துவங்குகிறதோ அப்போது கூட்டணி நாடுகளும் அதில் பங்கேற்கும்.
அல் கொய்தா
ஏமனில் இருப்பதிலேயே மிகவும் ஆபத்தானது அல் கொய்தா போராளிகள் தான். அவர்கள் பல ஆண்டுகளாக ஏமனில் போராடி வருகிறார்கள். அவர்கள் அமெரிக்காவுடன் நெருக்கமாக உள்ள அனைத்து அரசுகளையும் எதிர்க்கிறார்கள். அல் கொய்தா ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடி வருகிறது. சன்னி பிரிவை ஆதரிக்கும் அல் கொய்தா ஏமனில் ஒன்று தாங்கள் அல்லது ஹவ்திகள் இருக்க வேண்டும் என நினைக்கிறது.
ஐஎஸ்ஐஎஸ்
ஏமனில் ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு பெரிதாக எந்த நோக்கமும் இல்லை. ஆனால் 2014ம் ஆண்டில் அல் கொய்தாவினர் பலர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துவிட்டதால் ஏமனில் தங்கள் கொடியை நாட்ட நினைக்கிறது ஐஎஸ்ஐஎஸ். அல் கொய்தாவை வீழ்த்தினால் தான் ஏமனில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று நினைக்கிறது ஐஎஸ்ஐஎஸ். அல் கொய்தாவை வீழ்த்திய பிறகு அதன் அடுத்த இலக்கு ஹவ்தி கிளர்ச்சியாளர்கள்.
ஈரான்
ஈரான் மற்றும் ஹவ்தி கிளர்ச்சியாளர்களிடையே உள்ள உறவை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஷியா முஸ்லீம்களை பாதுகாக்க நினைக்கும் ஈரான் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கிறது. ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் ஆட்சிக்கு வந்தால் சவுதியை தோற்கடித்த திருப்தி ஈரானுக்கு கிடைக்கும்.
அமெரிக்கா
2002ம் ஆண்டில் இருந்து ஏமனில் நடக்கும் போரில் அமெரிக்கா பங்கேற்று வருகிறது. அல் கொய்தாவை எதிர்த்து போரிடுகிறேன் என்ற பெயரில் அமெரிக்கா இத்தனையும் செய்கிறது. ஹதியின் அரசு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது அமெரிக்கா. அல் கொய்தாவை தோற்கடிக்க அமெரிக்கா ஹதியின் உதவியை நாடியது. ஹதி அரசை தூக்க முயற்சிக்கும் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட வேண்டிய நிலையில் உள்ளது அமெரிக்கா.