ஏமனில் இருக்கும் எங்கள் மக்களையும் காப்பாற்றுங்கள்: இந்தியாவிடம் உதவி கேட்கும் 26 நாடுகள்
டெல்லி: ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்க இந்தியா எடுத்துள்ள முயற்சியை பார்த்து பாராட்டி தங்களுக்கும் உதவுமாறு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்பட 26 நாடுகள் கேட்டுள்ளன. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் இருந்து இந்தியர்களை மீட்பது எளிது அல்ல.
ஏமனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிக்கு ஆபரேஷன் ராஹத் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏமனின் அண்டை நாடான சவுதி அரேபியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு நல்லபடியாக உள்ளதால் இந்தியர்களை மீட்கும் பணி சற்று எளிதாகியுள்ளது.
மீட்பு பணிகளை பிரதமர் அலுவலகமும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் கண்காணித்து வருகிறது. இதனால் மீட்பு பணிகள் தொய்வின்றி நடந்து வருகிறது. வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் ஏமனின் அண்டை நாடான ஜிபோத்தியில் முகாமிட்டு மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார்.
ஆபரேஷன் ராஹத் மூலம் ஏமனில் சிக்கித் தவிக்கும் 4 ஆயிரம் இந்தியர்களில் 2 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏமனில் துப்பாக்கிச்சூடுகள், குண்டுவெடிப்புகள், வான் வெளித் தாக்குதல்கள் நடந்து வரும் ஆபத்தான வேளையில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறார்கள்.
ஏமனில் உள்ள ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையில் அரபு நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏமனில் சில இடங்களில் சவுதி வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சவுதியின் உதவி இல்லாமல் இந்தியர்களை மீட்பது கடினம் என்பதை இந்தியா புரிந்து கொண்டது.
பிரதமர் நரேந்திர மோடி சவுதி மன்னர் சல்மானுடன் இது குறித்து தொடர்பில் இருப்பதால் தான் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. முன்னதாக ஈராக்கில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்ட அனுபவம் தற்போது கை கொடுக்கிறது.
அதற்கும் முன்பு 2006ம் ஆண்டு லெபனானில் இருந்தும், 2011ம் ஆண்டு லிபியாவில் இருந்தும் இந்தியர்கள் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.