புரோக்கர் சுகேஷை சந்தித்து உண்மைதான்... 'துருவி துருவி' நடத்திய விசாரணையில் ஒப்புக் கொண்ட தினகரன்!
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க புரோக்கர் சுகேஷை சந்தித்தது உண்மையே என டிடிவி தினகரன், டெல்லி போலீசில் ஒப்புக் கொண்டுள்ளார்.
டெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க புரோக்கர் சுகேஷை தாம் சந்தித்தது உண்மைதான் என சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் டெல்லி போலீசில் ஒப்புக் கொண்டுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க தினகரன், புரோக்கர் சுகேஷ் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் டெல்லியில் சிக்கிய சுகேஷ் உண்மையை ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து ரூ1.30 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து சுகேஷ் சென்னைக்கு கொண்டுவரப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் டிடிவி தினகரன் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் கடந்த 3 நாட்களாக கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
தினகரன் அடம்
இந்த விசாரணைகளின் தொடக்கத்தில் டெல்லி போலீசின் அனைத்து கேள்விகளுக்கும் மழுப்பலாகவே தமக்கு ஒன்றும் தெரியாதது போலவே தினகரன் பதிலளித்து வந்தார். சுகேஷ் என்ற புரோக்கரையே தமக்கு தெரியாது என்றெல்லாம் கூட தினகரன் அடம்பிடித்து வந்தார்.
முட்டாளாக்கிய சுகேஷ்
சுகேஷூக்கும் தினகரனுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களை முன்வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது புரோக்கர் சுகேஷ் தம்மை ஒரு நீதிபதியாக காட்டிக் கொண்டு தினகரனிடம் பேரம் பேசியதும் அம்பலமானது. ஒரு புரோக்கர் நீதிபதியாக தம்மை காட்டிக் கொண்டு பேசுவதை கூட கண்டுபிடிக்காமல் தினகரனும் லஞ்சம் கொடுக்க முன்வந்ததும் தெரியவந்தது.
உண்மையை ஒப்புக் கொண்ட தினகரன்
இந்த நிலையில் டெல்லியில் நேற்று 3-வது நாளாக தினகரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று மாலை முதல் நள்ளிரவைத் தாண்டியும் 9 மணிநேரம் தினகரனிடம் விசாரணை நீடித்தது. இந்த விசாரணையில் சுகேஷை தாம் சந்தித்தது உண்மைதான் என வேறுவழியே இல்லாமல் தினகரன் ஒப்புக் கொண்டார். அப்போதும்கூட சுகேஷ் தம்மை நீதிபதியாகவே காட்டிக் கொண்டதாகவும் தினகரன் கூறியுள்ளார்.
கைது உறுதி
மேலும் சுகேஷூம் தினகரனும் வாட்ஸ் அப் மூலம் உரையாடியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உரையாடல் ஆதாரங்களை முன்வைத்தும் தினகரனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது. இன்று 4-வது நாளாக தினகரனை விசாரணைக்கு ஆஜராக டெல்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். தினகரனின் மீதான பிடி இறுகும் நிலையில் அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்கின்றன டெல்லி போலீஸ் வட்டாரங்கள்.