எனது மகனை ஷீனா காதலித்தது உண்மைதான், ஆனால் நான் ஏற்கவில்லை.. பீட்டர் முகர்ஜி
மும்பை: எனது முதல் மனைவிக்குப் பிறந்த மகனுடன், இந்திராணியின் முதல் கணவருக்குப் பிறந்த மகளான ஷீனா போரா காதல் கொண்டிருந்தது உண்மைதான். ஆனால் இதை இந்திராணியும் சரி, நானும் சரி ஏற்கவில்லை என்று பீட்டர் முகர்ஜி கூறியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட ஷீனா போரா, கைது செய்யப்பட்டுள்ள இந்திராணிக்கும், அவரது முதல் கணவருக்கும் பிறந்த மகள் ஆவார். இவருக்கும், பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்குப் பிறந்த மகனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதை முறை தவறிய காதல் என்பதால் இதை இந்திராணி விரும்பவில்லை. எனவே எதிர்த்தார். ஆனால் ஷீனா தனது காதலைத் தொடர்ந்தார். இது கடைசியில் கொலையில் போய் முடிந்து விட்டது.
இதுகுறித்து பீட்டர் முகர்ஜி கூறியுள்ளதாவது:
உறவை ஏற்கவில்லை
எனது முன்னாள் மனைவியின் மகனுக்கும், ஷீனாவுக்கும் இடையே காதல் இருந்தது. இதை அனைவரும் அறிவோம். அதை நானும் ஏற்கவில்லை. இந்திராணியும் ஏற்கவில்லை.
குடித்தனம் நடத்தினார்
எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த எனது மகனுடன் வாழவும் ஆரம்பித்து விட்டார் ஷீனா. அவருடன் தங்கவும் செய்தார். இதனால் இந்திராணி அதிர்ச்சி அடைந்தார்.
இந்திராணியின் மகள் என்பதே தெரியாது
மேலும் இந்திராணி கைது செய்ய்படும் வரை, ஷீனா, இந்திராணியின் மகள் என்றே தெரியாது. அவரது சகோதரி என்றுதான் எனக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.
பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது
ஷீனா எனக்கு மகள் முறை வருகிறாள். மைத்துனியாக நினைத்துக் கொண்டிருந்த பெண் எனக்கு மகள் என்று அறிய வந்தபோது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்து எனக்குத் தெரிவித்தனர். ஆனால் நான்தான் நம்பவில்லை.
மகனை எச்சரித்தேன்
2012ம் ஆண்டிலிருந்து ஷீனாவைக் காணவில்லை. அவள் அமெரிக்கா போய் விட்டதாக இந்திராணி கூறினார். எனவே எனது மகனை அழைத்து இனியும் ஷீனாவைப் பற்றி நினைக்காமல் வேறு வேலையைப் பார்க்குமாறு எச்சரித்திருந்தேன் என்று கூறியுள்ளார் பீட்டர் முகர்ஜி.