இனி சுங்கச்சாவடிகளில் கார்கள் நிற்காமல் செல்ல வருடாந்திர பாஸ்: அதுவும் மானிய விலையில்
டெல்லி: தனியார் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் விரைந்து செல்ல ஏதுவாக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தனியார் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு முறையும் நின்று வரி செலுத்துவதற்கு பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை மொத்தமாக ரூ. 2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரத்தை செலுத்தும் புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி சாலை போக்குவரத்து அமைச்சகம் கேபினட்டிடம் கேட்க உள்ளது.
தற்போது மாத பாஸ்கள் உள்ளன. ஆனால் அவற்றை வைத்து ஒரு சுங்கச்சாவடியை மட்டுமே கடந்து செல்ல முடியும். தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள திட்டம் வருடாந்திர பாஸ் ஆகும். அதை நாட்டில் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் பயன்படுத்தலாம்.
இந்த திட்டத்தின்படி தங்கள் வாகனங்களில் "Fastag" என்ற ஸ்மார்ட்டேக்கை இன்ஸ்டால் செய்பவர்களுக்கு மட்டுமே சலுகை அளிக்கப்படும். சலுகை விலையில் பாஸ் அளிக்கும் திட்டத்தால் அரசுக்கு ரூ.1,500 கோடி செலவாகும்.
தற்போது தனியார் வாகனங்கள் மூலம் ரூ.1,900 கோடி வரி செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.