திரும்பத் திரும்ப ... நிருபர்களிடம் எரிச்சல் காட்டிய சோனியா!
டெல்லி: திரும்பத் திரும்ப ஏன் ஒரே கேள்வியை கேட்கிறீர்கள் என்று ராகுல் காந்தி குறித்து திரும்பத் திரும்பக் கேட்ட செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோபம் காட்டினார்.
செய்தியாளர்களிடம் ஒரு பிரச்சினை. ஏதாவது பிரச்சினை கிடைத்து விட்டால் போதும், அதையே பிடித்துக் கொண்டு விடுவார்கள். அப்படித்தான் இப்போது ராகுல் காந்தியும் செய்தியாளர்களிடம் சிக்கியுள்ளார். "லீவு" போட்டு விட்டு ராகுல் காந்தி ஓய்வெடுக்க போனாலும் போனார். அவரை வைத்து செய்தியாளர்கள் கேள்வி மேல் கேள்வியாக கேட்டு வருகின்றனர்.
தாங்கள் சந்திக்கும் காங்கிரஸ் தலைவர்களிடம் விடாமல் ராகுல் காந்தி எப்போ வருவார் என்று கேட்டு வருகின்றனர். அந்த வகையில் சோனியா காந்தியிடமும் இதே கேள்வியை அவர்கள் கேட்கப் போக, சோனியா கடுப்பாகி விட்டார்.
இதுகுறித்து சோனியா கூறுகையில், திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை கேட்கிறீர்கள். அவர் திரும்பி வரும்போது நீங்களே அறிந்து கொள்வீர்கள் என்று கூறினார் சோனியா.
சரி பிரியங்கா காந்தியை பொதுச் செயலாளராக்கும் திட்டம் காங்கிரஸிடம் உள்ளதா என்று அடுத்த கேள்விக்கு செய்தியாளர்கள் தாவினர். ஆனால் அதற்கு சோனியா காந்தி பதிலே சொல்லாமல் நகர்ந்து விட்டார்.
இதற்கிடையே காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ராகுல் காந்தி, பிரியங்கா குறித்து கேள்வி கேட்பதை செய்தியாளர்கள் தயவு செய்து தவிர்க்க வேண்டும். அவர்களது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு மதிப்பளிக்க வேண்டும். ராகுல் காந்தி ஓய்வு என்பது அரிதான விஷயம் இல்லை. அது அவரது தனிப்பட்ட விஷயம். அதில் ஏன் இத்தனை கேள்விகள் எழுகின்றன என்றே தெரியவில்லை என்றார் அவர்.