மாடல் அழகியை சுட்டுப் படுகாயப்படுத்திய கணவர் கைது... கூட்டாளியுடன்
டெல்லி: டெல்லியில் தனது மனைவியை சுட்டு படுகாயப் படுத்திய வழக்கில், தலைமறைவாக இருந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளியன்று இரவு தென்கிழக்கு டெல்லியில் ஹரி நகர் பகுதி வீடொன்றில் நேகா சர்மா ( 23) என்ற மாடல் அழகி துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் மீட்கப் பட்டார். அவர் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மும்பையைச் சேர்ந்த நேகா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தனது பெற்றோருடன் டெல்லியில் தங்கி இருந்தார். விசாரணையில் நேகாவை அவரது கணவர் பிரின்ஸ் திவாடியாவே சுட்டுக் கொல்ல முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த பிரின்ஸைக் கைது செய்து நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்றிரவு பிரின்ஸ் மற்றும் அவரது கூட்டாளி ஜிதேஷ் பாண்டே இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது, அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி, சில துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப் பட்டது.
நேகாவைச் சுட்டதற்கான காரணம் குறித்து போலீசார் பிரின்ஸ் மற்றும் அவரது கூட்டாளியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரின்ஸ் மீது ஏற்கனவே டெல்லியில் சில காவல் நிலையங்களில் 3 கொலை முயற்சி வழக்குகள் பதிவாகியுள்ளதாக போலீசார் கூறுகிறார்கள்.
செய்தி சுருக்கம்:
டெல்லியில் மாடல் அழகி நேகாவை சுட்டு படுகாயப் படுத்திய அவரது கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த நேகா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக டெல்லி வந்திருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. நேகா தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.