ப்ளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களை ஏமாற்றி ரூ.50 லட்சம் சம்பாதித்த பலே நபர் கைது!
ஹைதராபாத்: ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களை ஏமாற்றி சுமார் ரூ.50 லட்சம் மோசடி செய்த பலே நபர் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த அவரது குடும்பத்தாரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
ஹைதராபாத், வனஸ்தலிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள துர்க்கா நகரை சேர்ந்தவர் வீர ராகவ ரெட்டி (25). கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். தனது தொழில்நுட்ப அறிவை பயன்படுத்து குறுக்கு வழியில் பணம் சேர்க்க திட்டமிட்டுள்ளார், ரெட்டி.
எலக்ட்ரானிக் பொருட்கள்
ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்களிடம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஆர்டர் செய்து, அவற்றை பெற்றுக்கொண்ட பின், உள்ளேயுள்ள முக்கியமான ஸ்பேர் பார்ட்ஸ்களை கழற்றி எடுத்துவிட்டு மீண்டும், அவற்றை திருப்பிக்கொடுத்து வேறு பொருளை வாங்க ஆரம்பித்துள்ளார் ரெட்டி. அப்படி மாற்று பொருள் கிடைக்காவிட்டால், திருப்பி கொடுத்து, பணமாக பெற்றுள்ளார்.
பல்வேறு முகவரி
கழற்றிய ஸ்பேர் பார்ட்ஸ்களை வெளியே விற்பனை செய்து லாபம் சம்பாதித்துள்ளார். ஒரே முகவரியில் இருந்து பொருளை வாங்கி, ரிட்டர்ன் செய்தால் சந்தேகம் வரும் என்பதற்காக தனது குடும்ப உறுப்பினர்கள் பெயர்களிலும், இ-மெயில் முகவரிகளிலும், பல்வேறு செல்போன் எண்களையும் கொடுத்து பொருட்களை வாங்கி, ரிட்டர்ன் செய்துள்ளார்.
ப்ளிப்கார்ட்டுக்கு சந்தேகம்
இதனிடையே, வனஸ்தலிபுரம் பகுதியில் மட்டும் அடிக்கடி பொருட்கள் ரிட்டர்ன் ஆவதால் சந்தேகமடைந்த ப்ளிப்கார்ட் நிர்வாகம், காவல் நிலையத்தில் புகார் அளித்தது. போலீசார் விசாரணை நடத்தி, வீர ராகவ ரெட்டியின் லீலைகளை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த தாய், சகோதரன், அண்ணி உள்ளிட்டோர் தலைமறைவாகியுள்ளனர்.
அமேசானிலும் மோசடி
பொருளை டெலிவரி செய்ய அட்ரசை மாற்றி, மாற்றிக்கொடுத்த வீரராகவ ரெட்டி அதில் ஒரு தவறு இழைத்துவிட்டார். அந்த முகவரிகள் அனைத்தும், வனஸ்தலிபுரம் பகுதியிலேயே அமைந்திருந்ததுதான் ப்ளிப்கார்ட்டுக்கு சந்தேகத்தை உருவாக்கி இவரை மாட்டிவிட்டது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, அமேசானிலும் இதேபோன்ற மோசடியில் ஈடுபட்டிருந்ததை ஒப்புக்கொண்டார்.
பலே மோசடி
பொருளை ரிட்டர்ன் எடுக்கவரும் ப்ளிப்கார்ட் அல்லது அமேசான் ஊழியர்கள், தொழில்நுட்பம் தெரியாதவர்கள். எனவே, மின்னணு பொருட்கள் மாற்றப்பட்டிருப்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. திருட்டுப்பொருட்களை விற்பனை செய்ததால் வீர ராகவ ரெட்டிக்கு, கிடைத்த லாபம் ரூ.55 லட்சமாம். இதற்காக ரூ.10 லட்சம் செலவிட்டுள்ளார்.