ஏர் இந்தியா அதிகாரியின் கன்னத்தில் அறைந்த ஒய்.எஸ்.ஆர் காங். எம்.பி - கிரிமினல் வழக்கு பதிவு
ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்பி, ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னத்தில் அறைந்த எம்.பி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அங்கு, வெள்ள சேதங்களை பார்வையிட ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வந்தார். அவரை வழியனுப்புவதற்காக கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை தொகுதி எம்.பி. மிதுன்ரெட்டி திருப்பதி விமான நிலையத்திற்கு வந்தார்.
அவரை வழியனுப்பிவிட்டு, அங்கிருந்து தனது உறவினர்களுடன் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் மிதுன்ரெட்டி. விமானம் புறப்படுவதுற்கு 45 நிமிடம் முன்பு போர்டிங் கவுண்டர்கள் மூடப்படும். இவர் சற்று தாமதமாக சென்றதால், கவுண்டர் மூடப்பட்டு டெல்லி செல்ல போர்டிங் பாஸ் கிடைக்கவில்லை.
இதனால், அவர் ஏர் இந்தியா நிறுவன மேலாளர் ராஜசேகர் என்பவரை சந்தித்து தனக்கும், தனது உறவினர்களுக்கும் விமான பயணத்துக்கு ஏற்பாடு செய்யும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் ராஜசேகரோ நேரம் முடிந்து விட்டது. எதுவும் செய்ய முடியாது என்று கூறவே, கோபமடைந்த எம்பி, ராஜசேகரின் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தலையிட்டு, இருவரையும் சமாதானப்படுத்தினர்.
எனினும் தன்னை அடித்த எம்.பி பற்றி எர்பேடு காவல் நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவன அதிகாரி புகார் அளித்தார். இதனையடுத்து பொது இடத்தில் தாக்கி, வன்முறையில் ஈடுபட்ட எம்.பி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல ஏர் இந்தியா மேனேஜரை தாக்கியதை நேரில் பார்த்த சில பயணிகளும் எம்.பியின் மீது புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.