மாஜி 'ஏர்போர்ட்' நாசாவுக்கு "இசட்" பிரிவு பாதுகாப்பு திடீர் நீக்கம். மத்திய அரசு உத்தரவு
புதுச்சேரி : முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு திடீரென நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாராயணசாமி வீட்டு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
தேசிய புலனாய்வு அமைப்பினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தமிழர் விடுதலை படையை சேர்ந்த திருச்செல்வம், தங்கராசு, தமிழரசன், கார்த்திக் உள்பட 6 பேரை கைது செய்தனர். வழக்கின் விசாரனை புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே ‘பைப் வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து நாராயண சாமிக்கு ‘இசட்'பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை வழங்கியது. இதன் பேரில் மத்திய ரிசர்வ் போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கி வந்தனர்.
நாராயணசாமியின் வீடு மட்டுமல்லாது அவர் செல்லும் வாகனங்களுக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இவர்களுடன் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாராயணசாமிக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறையின் பாதுகாப்பு பிரிவு பிறப்பித்துள்ளது.
சுமார் 2½ ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாராயணசாமிக்கு புதுச்சேரி மாநில போலீசாரின் பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.