ஷேக் ஹசீனாவை கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கு: 10 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை
டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் 10 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2000-ம் ஆண்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவை கொல்ல ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாம் அமைப்பு சதித் திட்டம் தீட்டியிருந்தது. ஹசீனாவின் பிரசார நடைபெற இருந்த பள்ளி மைதானத்தில் 76 கிலோ வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
ஹசீனாவின் பிரசார மேடையிலும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு டாக்கா விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இன்று டாக்கா நீதிமன்றம் இவ்வழக்கில் 10 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் 9 தீவிரவாதிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த 10 தீவிரவாதிகளையும் தூக்கிலிட்டோ அல்லது மேல் நீதிமன்றத்தின் அனுமதியுடன் துப்பாக்கியால் சுட்டோ மரண தண்டனையை நிறைவேற்றலாம். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாம் அமைப்பின் தலைவர் முப்தி ஹனான் கடந்த ஏப்ரல் மாதம் மற்றொரு வழக்கில் தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.