வாரிசுகளாக வலம் வரும் உலகத் தலைவர்களின் செல்ல மகள்கள்!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவன்கா டிரம்ப், அதிகாரப்பூர்வமாக, அமெரிக்காவின் 'முதல் மகளாக' உள்ளவர், அவருக்கென வெள்ளை மாளிகையில் ஓர் அலுவலகமும் உள்ளது என அமெரிக்க அரசின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
35 வயதான இவன்கா டிரம்ப், அதிபர் டிரம்ப்பின் 'கண்களாகவும் காதுகளாகவும்'' செயல்படுவார். ஆனால் அவருக்கு எந்தவித உத்தியோகமோ, சம்பளமோ அவர் பணிபுரியும்'வெஸ்ட் விங்'ல் (West Wing) அளிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
உலக தலைவர்களின் மகள்கள் தொடர்பான நீளும் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ளவர்தான் வெற்றிகரமான தொழிலதிபர் மற்றும் பிரபலமான நபரான இவன்கா டிரம்ப்.
பிபிசியின் வெலரியா பிரஸ்ஸோ செல்வாக்கு படைத்த மகள்களின் பங்கு பற்றி விவரிக்கிறார்.
தேர்தல் பிரசாரத்தில் குடும்பத்தினரின் பங்கு
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப் (43) ஆவர்.
முதலில் குடும்பத்தின் தொண்டு நிறுவனங்களின் வேலைகளில் ஈடுபட்டிருந்தார். திருமதி நவாஸ் 2013ல் தனது தந்தையின் வெற்றிகரமான தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
தற்போது அவர் வலதுசாரி பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சிக்காக பணியாற்றுகிறார்.
''மரியம் நவாஸ்தான் எப்போதும் கவனமுள்ள நபராக இருப்பார்,'' என்று மரியம் நவாசை பலமுறை சந்தித்துள்ள பிபிசி உருது செய்தி பிரிவை சேர்ந்த ஆசிப் பாரூக்கி கூறுகிறார். '' தந்தையின் அரசியல் வாரிசாக அறிவிக்கப்படாவிட்டாலும் கூட அவர் ஆற்றல்மிக்க நபராக உருவாகியுள்ளார் என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு அவரது பெயர் பனாமா பேபர்ஸ் என்று அறியப்படும் விவகாரத்தில் வெளியானது. மரியம் நவாஸ் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களுக்கு கணக்கில்இல்லாத வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களோடு தொடர்பு உள்ளதாகவும், அவர்களின் வங்கி கணக்குகள் லண்டனில் ஆடம்பர சொத்துக்களை வாங்க பயன்பட்டதாகவும்செய்திகள் வெளியாகின.
இது போன்ற குற்றச்சாட்டுக்களை ''சிலரின் வேலை'' என்று குறிப்பிட்ட நவாஸ் ஷெரிப் ''தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக என்னையும் எனது குடும்பத்தையும் இலக்குவைக்கிறார்கள்,'' என்று தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராக் அண்ட் ரோல் நடன கலைஞர்
ரஷியாவின் அதிபர் புதின் தனது சொந்த வாழ்க்கை குறித்து மிகவனமாக ரகசியம் காக்கக்கூடியவர் என்று பெயரெடுத்தவர். தற்போது வரை அவரது இரண்டு மகள்கள் பற்றி மிக சில தகவல்கள் மட்டுமே அறியப்பட்டுள்ளன.
''புதினின் மகள்கள் தொடர்பான எந்த வித ஊடகம் தகவல்களை கேட்டாலும் அவர்களை சந்தேகத்திற்கு உரியவர்களை போல ரஷிய அதிகாரிகள் நடத்துவார்கள்,'' என்கிறார் பிபிசியின் ரஷிய செய்தியாளர் பாஃமில் இஸ்மோலிவ்.
''தகவல்களை பெறுவது என்பது ஒவ்வொரு செய்தியாளரை பொருத்தது. பெரும்பான்மையான தகவல்களை புதின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியதில்லை,'' என்கிறார்.
2015ல் புதினின் இரண்டாவது மகள் ஏக்கட்டரீனா மாஸ்கோவில் காட்ரீனா டிகோனோவா என்ற பெயரில் வாழ்ந்துவருகிறார் என்ற தகவல் வெளியானதும் அவர் வெளிச்சத்திற்கு வந்தார்.
பல்வேறு ஊடக செய்திகளை கொண்டு அவர் தனது தந்தையின் பழைய நண்பரின் மகனான கிரில் ஷாமலோவ் என்ற ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார் என்றும் தெரியவந்தது. இந்த தம்பதி சுமார் இரண்டு பில்லியன் அளவுக்கு எரிவாயு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் தொழில்களில் முதலீடு செய்துள்ளனர் என்றும் ரஷிய மக்கள் தெரிந்துகொண்டனர்.
தற்போது 30 வயதான அவர் மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் அரசின் நிதியால் செயல்படுத்தப்படும் 'அறிவுசார் வளர்ச்சி' என்ற திட்டத்தை நடத்திவருகிறார் என்றுதெரியவந்துள்ளது. அவர் பல மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களை மேற்பார்வையிடுகிறார் என்றும் அதிபர் புதினின் உள்வட்ட உறுப்பினர்கள் அவருக்கு ஆலோசகர்களாக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
டிஃஹோனோவா அக்ரோபாட்டிக்கில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், ராக் அண்ட் ரோல் நடன கலைஞர் ஆவார்.
அவர் சுவிட்சர்லாந்தில் 2013 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்தாவது இடத்தை பெற்றார்.
ஆப்பிரிக்காவின் செல்வம் படைத்த குடும்பம்
1979ல் இருந்து அங்கோலாவில் ஆட்சி செய்த, அங்கோலா அதிபர் ஜோஸ் எட்வர்டோ டோஸ் சாண்டோஸ்சின் மகள் தான் 43 வயதாகும் இசபெல் டோஸ் சாண்டோஸ்.
அவர் அரசின் சோனாங்கள் என்ற அரசின் எண்ணெய் நிறுவனத்திற்கு தலைமை வகிக்கிறார். 2013ல் போர்ப்ஸ் பத்திரிகை ஆப்பிரிக்காவின் பணக்கார பெண் மற்றும் முதல் பெண் கோடீஸ்வரர் என்றும் சுமார் $ 3.2பில்லியன் நிகர பணமதிப்பு கொண்டவர் என்றும் தெரிவித்தது.
பிரிட்டனில் படித்த டோஸ் சாண்டோஸ் பெரிய அளவில் நிதி, தொலைத்தொடர்பு மற்றும் வைர தொழில் ஆகியவற்றில் பங்குகளை வைத்துள்ளார். இதன் மூலம் அவர் அங்கோலாவின் மிகுந்த செல்வாக்கு கொண்ட தொழிலதிபராக உள்ளார்.
அங்கோலாவின் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளரான போர்ச்சுகல் நாட்டில் மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் அவர் முதலீடுகள் செய்துள்ளார்.
உலகில் மிக அதிக ஊழல் நிறைந்த நாடு என்று ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு தெரிவித்துள்ள நாட்டில்,
தனது தந்தையின் நிர்வாக பொறுப்புக்கு இணையாக அவர் செல்வம் படைத்தவராக உள்ளார் என்ற குற்றச்சாட்டை அவர் அடிக்கடி சந்தித்துள்ளார் .
இந்த குற்றச்சாட்டை அவரும் அவரது ஆலோசகர்களும் மறுத்துள்ளனர்.
''நான் இப்போது அடைந்துள்ள வெற்றி என்பது ஒரே இரவில் வந்து சேர்ந்தது அல்ல,'' என்று பிபிசிக்கு 2015ல் அளித்த பேட்டியில் தெரிவித்தார். ''இதை கட்டியமைக்க சுமார் இரண்டு தசாப்தங்கள் ஆனது,'' என்றார் அவர்.
துருக்கி அதிபரின் செல்லமகள்
பரவலாக துருக்கி அதிபர் ரசிப் தாயிப் ஏர்துவானின் செல்லமகளாக 31 வயதான சுமே ஏர்துவான் இளைய மகள்பார்க்கப்படுகிறார். அவரது தந்தை ''எனது மான் (காசல் வகை மான்)'' என்று அவரை குறிப்பிடுவார் என்கிறார் பிபிசியின் துருக்கி செய்தியாளர் இல்ரம் கோகர். '' காசல் என்ற வார்த்தை தான் அழகு மற்றும் விலைமதிப்பில்லாத ஒன்று என குறிப்பிட பயன்படுத்தப்படும் வார்த்தை.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் படித்த ஓர் அரசியல் விஞ்ஞானியான இவர் தனது தந்தை நீதி மற்றும் அபிவிருத்தி கட்சியை தலைமை தாங்கிய பொழுது ஆலோசகராக இருந்தார். பலமுறை தூதரக பயணங்களில் தந்தையுடன் சேர்ந்து பயணம் செய்திருக்கிறார்.
2015ல் நாடாளுமன்ற தேர்தலில் சுமே ஏர்துவான் போட்டியிடுவார் என்று யூகிக்கப்பட்டது ஆனால் அந்த சமயத்தில் அவர் போட்டியிடவில்லை.
தற்போது அவர் துருக்கி பெண்களுக்கான ஓர் ஆலோசனை குழுவில் ஒரு சாதாரண பொறுப்பில் உள்ளார்.
தனது பிரசார பணியுடன், சுமே ஏர்துவான் தனது தந்தை மற்றும் அவரது அரசுக்கு வெளிப்படையான ஆதரவாளராக உள்ளார்.
ஒசோதோ ரஹ்மான்
நீண்ட காலமாக தஜிகிஸ்தானின் அதிபராக உள்ள எமோமோலி ரஹ்மானின் மகள் 39 வயதான ஒசோதோ ரஹ்மான். அவர் சட்டம் படித்துள்ளார். 2009ல் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சராக அவர் பொறுப்பேற்பதற்கு முன்னதாக தூதரக பணியில் வேலை செய்தார்.
2016ல் அவரது தந்தை அவரை அதிபரின் நிர்வாக பிரிவின் தலைவராக அறிவித்தார். மேலும் ஒசோதோ ரஹ்மான் செனட் சபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்..
ஒசோதோ, தஜிகிஸ்தானின் மத்திய வங்கியின் துணை தலைவரான ஜமாலுதீன் நுராலியாவை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள்.
அரசு பணியில் உள்ள குடும்ப நபர் ஒசோதோ மட்டுமல்ல. அதிபர் எமோமோலி ரஹ்மானின் ஒன்பது குழந்தைகளில் முதல் மகன் ரஸ்டம் தலைநகர் துஷன்பேவின் மேயராக உள்ளார். இளம் மகள் ரக்ஃஷோனா வெளியுறவுத் துறையில் பணியாற்றுகிறார்.
மற்ற உறவினர்கள் தொழில் மற்றும் அரசாங்கத்தில் தலைமை பொறுப்பில் உள்ளனர். இதன் காரணமாக ரஹ்மானின் குடும்பத்தினர் தஜிகிஸ்தானில் பணக்கார மற்றும் மிக செல்வாக்கான குடும்பமாக உள்ளனர்.
பாலியல் சிறுபான்மையினருக்கான குரல்
கியூபா நாட்டு அதிபர் ரால் காஸ்ட்ரோவின் மகள் மாரியலா காஸ்ட்ரோ மறைந்த புரட்சிகர தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் தம்பி மகள்.
மாரியலா காஸ்ட்ரோவின் தாய் வில்மா எஸ்பின் பெண் உரிமை போராளியாக பார்க்கப்படுகிறார்,'' என்கிறார் பிபிசி முண்டோவின் செய்தியாளர் லில்லிஎட் ஹெர்டோரோ. ''தற்போது அவரது மகள் அவரது அடிச்சுவட்டை பின்பற்றுபவராக பார்க்கப்படுகிறார்,'' என்றார்.
1962ல் பிறந்த மாரியலா காஸ்ட்ரோ வெளிப்படையாக பேசக்கூடியவர். நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும்
பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்.
அவர் ஹவானாவில் உள்ள பாலியல் கல்விக்கான தேசிய மையத்திற்கு தலைமை வகிக்கிறார். இந்த மையம் ஒருபால் உறவுக்காரர்களுக்கு எச் ஐ வி நோய் தடுப்பு குறித்து ஒரு திட்டத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு ஆற்றியது.
கியூபாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும் என்ற புதிய சட்டத்தை 2008 ல் நிறைவேறுவதற்காக பரப்புரை செய்தவர்.
''இவர் சர்ச்சைக்குரிய நபர்,''லில்லிஎட் ஹெர்டோரோ. ''அதிபரின் மகள் என்பதால் தான் இவர் வேலைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார் என்று பலர் கருதுகின்றனர்,'' என்றார்.
குடும்ப அரசியல், வாரிசு அரசியல் செய்கிறார்கள் என்று உள்ளூரில் அவ்வப்போது, குறிப்பாக தேர்தல் நேரத்தில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்படும் நிலையில், உலக அளவில் வாரிசு அரசியல் ஊக்கமளிக்கப்படுவதாகவே பார்க்கப்படுகிறது.