மியான்மர் தண்ணீர் திருவிழா…11 பேர் பலி, 134 பேர் படுகாயம்
யங்கூன்: மியான்மரில் நடைபெற்ற தண்ணீர் திருவிழாவில் பங்கேற்றவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மியான்மரில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் திங்க்யான் தண்ணீர் திருவிழா கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றது. பர்மீஸ் புத்தாண்டாக கொண்டாடப்படும் இவ்விழாவின் போது பொது விடுமுறை அளிக்கப்படும். இந்த தண்ணீர் விழாவில் கலந்து கொண்டால் தங்களது பாவங்களும், தீமைகளும் அகன்று புத்தாண்டில் நல்வாழ்வு கிடைக்கும் என்று அந்நாட்டு மக்கள் நம்புகிறார்கள்.
அப்படி இந்த விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களில் 11 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளதாகவும், 134 பேர் காயமடைந்ததாகவும் சின்ஹுவா நாளிதழ் கூறியுள்ளது.
அதிக பாரம், போதை மற்றும் அதிவேகத்தில் வாகனம் ஓட்டியதால் 50 இடங்களில் விபத்துகள் ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.
கடந்த ஆண்டு இதே திருவிழாவின்போது, 15 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.