ஐக்யூ டெஸ்ட்டில் ஐன்ஸ்டனை மிஞ்சிய மதிப்பெண்...11 வயது இந்திய சிறுவன் சாதனை!
புத்திக்கூர்மையை பரிசோதிக்கும் சோதனையில் இந்திய சிறுவன் 162 மதிப்பெண்களை பெற்ற சாதனை படைத்துள்ளான்.
லண்டன்: லண்டனில் நடந்த ஐ.கியூ தேர்வில் 11 வயது இந்திய சிறுவன் அர்னவ் ஷர்மா விஞ்ஞானி ஐன்ஸ்டைனை விட அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளான்.
தெற்கு இங்கிலாந்தின் ரீடிங் நகரில் வசிக்கும் 11 வயது இந்தியச் சிறுவன் அர்னவ் ஷர்மா, கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஐகியூ அளவை சோதிக்கும் மென்சா தேர்வை எழுதியுள்ளான். எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் ஜாலியாக தேர்வில் பங்கெடுத்துள்ளான் அர்னவ்.
தான் தேர்வில் பங்கேற்றது குறித்து அந்த நாட்டு ஊடகத்திற்கு அர்னவ் அளித்த பேட்டியில் கூறுகையில், " நான் பதற்றம் இல்லாமல் தேர்வில் கலந்து கொண்டேன். இது கடினமான தேர்வு அதனால் அதிகம் பேர் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று நினைத்தேன்."
ஆச்சரியம்
அதே போலவே 8 பேர் தான் தேர்வு எழுதினோம் அதில் 2 பேர் சிறுவர்கள், மற்றவர்கள் அனைவரும் பெரியவர்கள். தேர்வுக்காக நான் பெரிதாக எந்த புத்தகத்தையும் படிக்கவில்லை. இரண்டரை மணி நேரம் தேர்வு எழுதச் சொன்னார்கள், எனக்குத் தோன்றியதை எழுதினேன். ஆனால் தேர்வு முடிவுகள் வந்த போது என்னுடைய குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டதோடு மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்" என்கிறார்.
தாய்மனம்
அர்னவ் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள சிறுவனின் தாயார் மேஷா தமீஜா ஷர்மா, "அர்னவ் தேர்வு எழுதும் சமயத்தில் நான் மிகவும் பதற்றத்தோடு இருந்தேன். ஏனெனில் இதற்கு முன்னர் இது போன்று வினாத்தாள் எல்லாம் அவன் கண்டதே இல்லை."
புத்திசாலி
அவனுக்கு ஒன்றரை வயது இருக்கும் போது இந்தியா வந்திருந்தோம், அப்போது அர்னவின் பாட்டி அவன் படிப்பில் கெட்டிக்காரனாக வருவான் என்று கூறியதை நினைவுபடுத்துகிறார் மேஷா. இரண்டரை வயது இருக்கும் போதே அர்னவ் 100 வரை அனைத்து எண்களையும் சொல்லிவிடுவான். அப்போதே நான் அவனுக்கு கற்றுக் கொடுப்பதை நிறுத்திவிட்டேன்.
எல்லை இல்லை
ஏனெனில் அவனுடைய எண்ணங்களுக்கு எல்லை இல்லை என்பதை நான் உணர்ந்துகொண்டேன். அர்னவ் தந்தை மிகவும் புத்திசாலியாக இருப்பார் என்றும் அதன் காரணமாக அர்னவும் இத்தனை புத்திசாலியாக இருந்திருக்கலாம் என்றும் பெருமைப்படுகிறார் மேஷா.
பாராட்டுகள்
விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் போன்றவர்களை விட அர்னவ் கூடுதலாக 2 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 162 மதிப்பெண்கள் பெற்றிருப்பதே அர்னவ் கொண்டாடப்படுவதற்கான காரணம். ஐக்யூ தேர்வை நடத்தும் மென்சா உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான அமைப்பாகும். இந்த தேர்வு இங்கிலாந்தில் மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. மனிதர்களின் நுண்ணறிவை சோதிக்கும் இந்த தேர்வில் குறைவான நபரே பங்கேற்பார்கள்.