‘பொம்மை’ துப்பாக்கியுடன் விளையாடிய சிறுவனை தவறுதலாக சுட்டுக் கொன்ற அமெரிக்க போலீசார்!
நியூயார்க்: பொம்மை துப்பாக்கியுடன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவனை, நிஜ துப்பாக்கி வைத்திருப்பதாகக் கருதி போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கிளீவ்லாந்தில் ஒரு விளையாட்டு மைதானத்தில் டாமிர் ரைஸ் என்ற 12 வயது சிறுவன் பொம்மைத் துப்பாக்கி ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.
சமீபகாலமாக அமெரிக்காவில் தனிநபர் துப்பாக்கிச் சூடு, அதிலும் குறிப்பாக குழந்தைகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. இது அங்குள்ள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, டாமிர் விளையாடிக் கொண்டிருந்த பகுதி வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ‘சிறுவன் ஒருவன் கையில் துப்பாக்கி வைத்து, நண்பர்களைச் சுட முயற்சிப்பதாக' போலீசாருக்கு போன் மூலமாக தகவல் அளித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓஹியோ மாகாண போலீசாரும் சிறுவன் கையில் இருந்ததை நிஜ துப்பாக்கி என்றே கருதியுள்ளனர். எனவே, உடனடியாக துப்பாக்கியை கீழே போட்டு விட்டு கைகளை மேலே தூக்குமாறு அவர்கள் டாமிரை எச்சரித்துள்ளனர்.
ஆனால், திடீரென போலீசாரின் வருகையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டாமிர், துப்பாக்கியைக் கீழே போடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மற்றவர்களின் உயிரைக் காப்பதாக நினைத்து டாமிர் மீது துப்பாக்கியால் சுட்டனர் போலீசார். இதில் டாமிரின் வயிற்றில் இரண்டு குண்டுகள் பாய்ந்தது. உடனடியாக சிகிச்சைக்காக டாமிர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். ஆனால், சிகிச்சைப் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.
சிறுவனை சுட்ட பின்னர் அவனிடமிருந்த துப்பாக்கியை மீட்ட போலீசார், அது வெறும் ஏர்கன் எனப்படும் விளையாட்டுத் துப்பாக்கி எனக் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசாரின் தவறுதலான முடிவால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.