வங்கதேசத்தில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி: 18 பேரை காணவில்லை
டாக்கா: வங்காளதேசத்தில் அதிக ஆட்களை ஏற்றி சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர். 18 பேரை காணவில்லை.
பரிசால் மாவட்டம், பனாரிபாரா பகுதியைச் சேர்ந்த சுமார் 80 பேர் புதன்கிழமை ஒரு படகில் ஏறி சந்தியா ஆற்றை கடந்து சென்றுகொண்டிருந்தனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆட்களை ஏற்றி வந்த அந்த படகு நடுஆற்றில் கவிழ்ந்தது. இதில் சிக்கிய சிலர் நீந்தி கரைக்கு வந்தனர். இதில் 13பேர் பலியாகினர். 18க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
தீயணைப்பு படையினை சேர்ந்த நீச்சல் வீரர்கள், போலீசார் மற்றும் அருகிலுள்ள மக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றுக்குள் மூழ்கிய படகினை நீச்சல் வீரர்கள் கண்டறிந்துள்ளனர். அதற்குள் கூடுதலாக சிலரது உடல்கள் இருக்க கூடும் என தேடுதல் பணியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
வங்காளதேசத்தில் அதிகளவில் படகு விபத்துகள் நடப்பது வழக்கம். கடந்த பிப்ரவரி மாதம் மத்திய வங்காளதேசத்தில் நடந்த படகு விபத்து ஒன்றில் 69 பேர் பலியானார்கள்.