ஒரு லட்சம் அகதிகள்... 20 ஆயிரம் பேரை காணவில்லை.. பாகிஸ்தானால் தொடரும் பலுசிஸ்தான் துயரம்
பலுசிஸ்தான்: பாகிஸ்தான் செய்து வரும் தொடர் அட்டூழியத்தால் பலுசிஸ்தானத்தில் இதுவரை 20 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். சொந்த ஊரிலேயே ஒரு லட்சம் பேர் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.
பலுசிஸ்தானத்தில் பாகிஸ்தான் செய்து வரும் அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் போது கேள்வி எழுப்பி இருந்தார். இதனை தொடர்ந்து பலுசிஸ்தானில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து பேசுவது மேலெழத் தொடங்கியுள்ளது.
பலுசிஸ்தானில் பாகிஸ்தான் செய்து வரும் அட்டூழியங்கள் குறித்து பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தினர், பலுசிஸ்தானத்தில் சிறுவர் சிறுமியர் படிப்பதற்கு கல்விக் கூடங்கள் இல்லை. அவசிய தேவைக்கு மருத்துவமனை இல்லை. பலுசிஸ்தான் மக்களுக்காக ஒரு சிறு நன்மையை கூட பாகிஸ்தான் செய்ததில்லை. 21 ம் நூற்றாண்டிலும் எரிவாயு அடுப்பிற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தும், இங்குள்ள பெண்கள் விறகு அடுப்புகளை பயன்படுத்தவே பாகிஸ்தானால் நிர்பந்திக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், பலுசிஸ்தானில் உள்ள கவடார் துறைமுகத்தில் இருந்து சீனாவிற்கு பொருளாதார பாதை ஒன்றை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக எந்த வித ஆலோசனையையும் பலுசிஸ்தான் மக்களிடம் கேட்கவே இல்லை என்றும் பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பணத்தின் பெரும் பகுதியை தீவிரவாதத்திற்கே பாகிஸ்தான் பயன்படுத்துகிறது என்றும், தீவிரவாதத்திற்கு எதிராக பயன்படுத்துவதாக சொல்லப்படும் எப்-16 விமானம் உள்ளிட்டவைகளை பலுசிஸ்தான் மக்களை கொல்வதற்கே பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்துகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை 20 ஆயிரம் பேர் பாகிஸ்தானால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். பலர் சடலங்களாக கிடைத்துள்ளனர். சிலர் கிடைக்காமலேயே போயுள்ளனர். இதைத்தான் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் "கொன்று புதைக்கும் கொள்கை" என்று கூறியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் கிராமங்களை எரித்தும், வெடிகுண்டுகளை வீசியும் வருவதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று பலுசிஸ்தான் விடுதலை இயக்கதினர் தெரிவித்துள்ளனர்.