அமெரிக்கா: கொலராடோ மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி - 9 பேர் காயம்
கொலராடோ: அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மருத்துவமனையின் குடும்ப கட்டுப்பாட்டு மையத்திற்குள் புகுந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 3 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொலராடாவில் உள்ள ஸ்ப்ரிங்ஸ் பெண்களுக்கான பிரத்யேக மருத்துவமனையில் குடும்பக் கட்டுபாடு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மருத்துவமனைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் பலியாகினர். 5 போலீஸ் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.
5 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையின் இறுதியில் மர்ம நபர் போலீஸில் சரணடைந்தார்.
சம்பவம் குறித்து ஊடகங்கத்தில் விளக்கம் அளித்த போலீஸ் உயரதிகாரி லெப்டினன்ட் கேத்தரீன் பக்லீ, "ஸ்ப்ரிங்க்ஸ் மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சை பெற்று நலமாக உள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட நபர் 5 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் போலீஸில் சரணடைந்துள்ளார். அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. அவருக்கும் தாக்குதலுக்குள்ளான ஸ்ப்ரிங்ஸ் மருத்துவ சிகிச்சை மையத்துக்கும் ஏதாவது தொடர்பு அல்லது முன்விரோதம் இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. இல்லை அவர் ஏதாவது அடிப்படைவாத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இத்தாக்குதலை நடத்தினாரா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது" என்றார்.
கைது செய்யப்பட்ட நபர், ராபர்ட் லெவிஸ் டியர் (வயது 59) என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். குடும்ப கட்டுப்பாட்டு மையத்திற்குள் குண்டுகள் எதுவும் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர ஆய்வு செய்தனர். குறிப்பிட்ட நோக்கத்துடன் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா என இதுவரை தெரியவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.