3 பாகிஸ்தானியருக்கு 96 குழந்தைகள்.. இன்னும் பெற்றுக் கொள்வோம் என கூறுகிறார்கள்!
கராச்சி: பாகிஸ்தானை சேர்ந்த 3 மதகுருமார்களுக்கு 96 குழந்தைகள் உள்ளனர். இதற்காக அவர்கள் மூவரும் கவலைப்படவில்லை. கடவுள் கொடுக்கும் வரை பெற்றுக் கொள்வோம் என கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த குல்சார் கான், மஸ்தான் கான் வாசிர், கான் முகமது. இவர்கள் மூவரும் முஸ்லிம் குருமார்கள் ஆவர். இவர்களில் குல்சார் கானுக்கு 36 குழந்தைகள் உள்ளன. 70 வயதான மஸ்தானுக்கு 22 குழந்தைகளும், முகமதுவுக்கு 38 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு தலா 2 அல்லது 3 மனைவிகள் உள்ளனர்.
இவர்களுள் குல்சார் கானின் மனைவி பானுவுக்கு தற்போது 57 வயதாகிறது. இவர் தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் தொகை வளர்ச்சி
தெற்காசியாவில் மக்கள் தொகை வளர்ச்சி அதிகம் உள்ள நாடு பாகிஸ்தான்தான். இப்படியே மக்கள்தொகை எகிறி கொண்டே இருந்தால் பாகிஸ்தான் வருங்காலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள நாடுகளில் ஒன்றாக பரிசீலிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முரண்பாடானது
ஆனால் மேற்கண்ட 3 மதகுருமார்களோ குடும்ப கட்டுப்பாடு என்பது இஸ்லாம் மதத்திற்கு முரணானது என்கின்றனர். இந்த நாட்டின் நிலை மிகவும் மோசமாக உள்ளபோதிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகநலன் குறித்து இவர்கள் பெரிதாக கவலைப்படவில்லை.
கடவுள் கையில் உள்ளது
இதுகுறித்து குல்சார் கான் தெரிவிக்கையில், ஒட்டு மொத்த உலகத்தையும் மனித உயிர்களையும் படைத்தது கடவுள்தான். அவ்வாறு இருக்கையில் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதை நாம் ஏன் தடுக்க வேண்டும். மேலும் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் வளங்களை கடவுள் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றார்.
135 மில்லியன்
உலக வங்கியின் தகவலின்படி, தெற்காசியாவிலேயே அதிக பிறப்பு விகிதத்தை கொண்ட நாடு பாகிஸ்தான் ஆகும். கடந்த 1998ம் ஆண்டு மக்கள்தொகை 135 மில்லியனாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 200 மில்லியனுக்கு அருகில் உள்ளது.
நாம் இருவர் நமக்கு ஒருவர்
அந்த காலத்தில் நமது தாத்தா, பாட்டிகள் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்று கொண்டனர். காலப்போக்கில் நாம் இருவர் நமக்கு இருவர் என்று அரசு கூறியது. அது மேலும் குறைந்து தற்போது நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலை வந்துள்ளது. இருப்பினும் மக்கள் தொகை குறைந்தபாடில்லை.