லாரியால் சிறையை உடைத்து 36 கைதிகள் தப்பி ஓட்டம்– பிரேசிலில் பரபரப்பு!
ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் சிறையை உடைத்து 36 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசில் நாட்டு வட பகுதி மாநிலமான மரன்காவோவின் பெட்ரினாஸ் பகுதியில் சிறை ஒன்று உள்ளது.
இதில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த சிறையின் ஒரு பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.
கட்டுமான பொருட்கள்:
எனவே கட்டுமான பொருட்கள் கொண்டு வந்த லாரி ஒன்று அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
சுவரில் மோதிய கைதிகள்:
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 4 கைதிகள், திடீரென அந்த லாரியை திருடி சிறையின் ஒரு பக்க சுவரில் பலமாக மோதினர்.
36 கைதிகள் ஓட்டம்:
இதனால் அந்த சுவர் இடிந்து விழுந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 36 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர்.
அடையாளம் தெரிந்தது:
இது சிறை அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் தப்பி ஓடிய அனைத்து கைதிகளும் அடையாளம் காணப்பட்டுவிட்டனர்.
லாரியை திருடியவர் கைது:
அவர்களை தேடி கைது செய்யும் பணிகளை சிறை நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. அதன்படி லாரியை திருடிய 19 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.