உருண்டோடிய 36 ஆண்டுகாலம்.. ஈரானிய புரட்சி சாதித்திருப்பது என்ன?
டெஹ்ரான்: ஈரானில் 1979ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்த புரட்சியை நினைவு கூறும் வகையில் அந்நாட்டின் பல இடங்களில் பேரணிகள் நடத்தப்பட்டன.
1979ஆம் ஆண்டு ஈரானில் அமெரிக்கா ஆதரவு ஆட்சிக்கு முடிவு கட்டியது ஈரானிய புரட்சி. இந்தப் புரட்சியை நினைவுகூறும் வகையில் பிப்ரவரி 11-ந் தேதியான நேற்று ஈரானின் பல்வேறு இடங்களில் பேரணிகள் நடத்தப்பட்டன. புரட்சிக்குப் பின்னர் 36 ஆண்டுகாலத்தில் ஈரான் எதிர்கொண்ட சவால்கள் ஏராளம்...
சர்வதேச சக்திகள் ஆதரவுடன் ஈரான் மீது ஈராக்கின் சதாம் உசேன் படையெடுத்த போர் 8 ஆண்டுகாலம் நீடித்தது. ஆயிரக்கணக்கான ஈரானிய, ஈராக்கிய வீரர்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் தடைகள்...
மேற்கத்திய நாடுகளுடனான மோதலின் விளைவாக ஈரானில் படுகொலைகள், குண்டு தாக்குதல்கள், சைபர் யுத்தம்.. இத்தனைக்கும் பின்னரும் ஈரான் நிமிர்ந்தே நிற்கிறது.. ஈரானை ஆக்கிரமிக்க வல்லரசுகள், ஏன் அரபு நாடுகளின் ஆதரவுடன் ஈராக் படை எடுத்த போது ஒரு பிடி மண்ணைக் கூட ஈரான் விட்டுக் கொடுக்கவில்லை.
சதாம் உசேனின் படைகள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி பேரழிவை நிகழ்த்திய போதும் கூட அசந்துபோகவில்லை ஈரான்.. 1979ஆம் ஆண்டு ஈரான் இருந்த நிலைமையில் இருந்து அபார வளர்ச்சியில் இருக்கிறது ஈரான் தேசம்.
உதாரணமாக 1976ஆம் ஆண்டு ஈரானின் கல்வியறிவு சதவீதம் என்பது 36% ஆக இருந்தது.. தற்போதோ ஈரானிய பல்கலைக் கழகங்களில் 60% பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அணுசக்தி; ஸ்டெம் செல், குளோனிங் ஆராய்ச்சி நானோ டெக்னாலஜி, மருத்துவம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம் என ஒவ்வொரு துறையிலும் உலகின் முதல் 10 அல்லது 20 நாடுகளில் ஒன்றாக உயர்ந்திருக்கிறது ஈரான்.
செயற்கைக்கோள்கள், நீர்மூழ்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், டாங்கிகள் தயாரிப்பு என எண்ணிப்பார்க்க முடியாத வளர்ச்சியை எட்டியிருக்கிறது ஈரான்..
அதே நேரத்தில் மனித உரிமைகள், ஊழல் ஒழிப்பு, அதிகமான பணவீக்க விகிதம், அதிகார துஷ்பிரயோகம், அரசியல்துறை என சமூகக் கட்டமைப்பில் ஈரான் பயணிக்க வேண்டிய தொலைவு மிக அதிகமாக இருக்கிறது என்பதே நிதர்சனம்