4 இந்திய-அமெரிக்கர்களுக்கு 'சிறந்த புலம்பெயர்ந்தவர்கள்:அமெரிக்காவின் பெருமை' விருது
வாஷிங்டன்: பிரபல வழக்கறிஞர் ப்ரீத் பராரா உள்பட 4 இந்திய-அமெரிக்கர்களுக்கு கௌரவ விருதான சிறந்த புலம்பெயர்ந்தவர்கள்: அமெரிக்காவின் பெருமை விருது கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த கார்னகி கார்பரேஷன் ஆண்டுதோறும் சிறந்த புலம்பெயர்ந்தவர்கள்: அமெரிக்காவின் பெருமை விருதை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டு விருது 4 அமெரிக்க இந்தியர்கள் உள்ளிட்டோருக்கு கிடைத்துள்ளது.
பிரபல வழக்கறிஞர் ப்ரீத் பராரா, ஹார்வர்ட் கல்லூரியின் டீன் ராகேஷ் குரானா, எம்ஐசியின் எக்சிகியூட்டிவ் எடிட்டர் மதுலிகா சிக்கா, பிரபல டாக்டரும், பேராசிரியரும், எழுத்தாளருமான ஆபிரகாம் வர்கீஸ் ஆகியோருக்கு தான் அமெரிக்காவின் பெருமை விருது கிடைத்துள்ளது.
இது குறித்து பராரா கூறுகையில்,
பர்கர் சாப்பிடுவதற்கு முன்பு பிரியாணி சாப்பிட்ட, பேஸ்பாலுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடிய என் போன்ற மக்களை தினமும் வரவேற்கும் ஒரே நாடு அமெரிக்கா தான். அமெரிக்க கனவு என்ற ஒன்று இன்றும் உள்ளது. நான் அந்த கனவை கண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அந்த கனவில் இருந்து விழிக்க விரும்பவில்லை. சிறந்த புலம்பெயர்ந்தவர் விருது கிடைத்தது கௌரவமாக உள்ளது என்றார்.
சிறந்த புலம்பெயர்ந்தவர்கள் விருது பட்டியலில் என் பெயரையும் சேர்த்ததில் பெருமையாக உள்ளது. அமெரிக்கா என்னிடம் நன்றாக நடந்து கொண்டுள்ளது என்று சிக்கா தெரிவித்துள்ளார்.
கார்னகி கார்பரேஷனின் நிறுவனர் ஆன்ட்ரூ கார்னகி ஏழையாக அமெரிக்காவுக்கு வந்து பெரும் பணக்காரர் ஆனவர். அவர் தான, தர்மங்கள் செய்ததற்கு பெயர் போனவர் என்று அந்நிறுவன தலைவர் வார்டன் கிரகோரியன் தெரிவித்துள்ளார்.