நேபாளத்தைத் தொடர்ந்து பாக்.கிலும் நிலநடுக்கம்: அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்
பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான கைபர் படுங்க்வா மாகாணத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான கைபர் படுங்க்வா மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.
தஜிகிஸ்தான் அருகே உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாக வைத்து இந்த நிலநடுக்கம் 144 கிலோமீ்ட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் வானிலை மைய துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மலகந்த், ஸ்வாட் மற்றும் திர் மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 4வது நாளில் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக 2013ம் ஆண்டு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 7.7 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 500 பேர் பலியாகினர். அதற்கும் முன்பு 2005ம் ஆண்டில் 7.6 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.