சாலமன் தீவுகள் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை
சிட்னி: பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா அருகில் உள்ள சாலமன் தீவுகள் அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா அருகில் உள்ள சாலமன் தீவுகள் அருகே இன்று அதிகாலை 3.35 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி இருந்தது. தலைநகர் ஹோனியாராவில் இருந்து 334 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடத்தில் 8.9 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சாலமன் தீவுகள் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் உள்ளது. அதனால் அங்கு அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு சாலமன் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 8.0 என்ற அளவுக்கு மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட சுனாமியால் 10 பேர் பலியாகினர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.