ரஷ்ய மீன்பிடி கப்பல் மூழ்கி 54 பேர் பலி… மாயமானோரை தேடும் பணி தீவிரம்
மாஸ்கோ: ரஷ்யாவை சேர்ந்த மீன்பிடி கப்பல் மூழ்கியதில் அதில் பணியாற்றிய 132 பேரில் 54-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் அளித்துள்ள செய்திக்குறிப்பில், ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காம்சட்கா தீபகற்பத்தின் ஓகோட்ஸ்க் கடல் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. நேற்று நள்ளிரவு நடந்த மீன்பிடி கப்பல் விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. கடலில் மிதந்து செல்லும் பனிப்பாறைகளில் கப்பல் மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் விபத்தில் மீட்பு குழுவினரால் 63 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 15 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியில் மீன் பிடிப்பதில் ஈடுபட்டிருந்த 25 படகுகளும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மீன்பிடி கப்பலில் பணியாற்றியவர்களில் 78 பேர் ரஷ்யர்கள். 54 பேர் மியான்மர், உக்ரஹைன், லிதுவேனியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.