6 நர்சுகளை குத்தி கொன்ற மருத்துவமனை முன்னாள் ஊழியர்
பெய்ஜிங்: மருத்துவமனை முன்னாள் ஊழியர் நடத்திய சரமாரி கத்தி குத்து தாக்குதலில் 6 நர்சுகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீன தலைநகர் பெய்ஜிங் அருகே பெய்டேகே என்ற கடற்கரையோர நகர் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சேர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்துவது வழக்கம். இந்த நகரில் உள்ளது பிஎல்ஏ-281 என்ற மருத்துவமனையில் நேற்று ஒரு வாலிபர் புகுந்து அங்கு பணிபுரிந்த நர்சுகள் மற்றும் பணியாளர்களை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளும் பயந்து, அலறியடித்து ஓடினர். இந்த கொடூர தாக்குதலில் 6 நர்சுகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஒரு நர்சு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடனே அங்கிருந்தவர்கள் தாக்குதல் நடத்திய வாலிபரை பிடித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் லி ஸியோலாங் (வயது 27) என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் அதே மருத்துவமனையில் இதற்கு முன்பு பணியாற்றி வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. நர்சுகளை கொலை செய்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சீனாவில் கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்பத்திரி மற்றும் டாக்டர்கள் மீதான தாக்குதல்கள் நீடித்து வருகிறது. நோயாளிகளிடம் அதிக பணம் வசூலித்தல், மருத்துவ சிகிச்சை குறைபாடு போன்ற காரணங்களால் இதுபோன்ற தாக்குதல்கள் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.