இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் பெரும் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை: இந்தியாவுக்கு பாதிப்பில்லை
ஜகார்தா: இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் இன்று காலை கடலுக்கு அடியில் 7.3 ரிக்டர் அளவுக்கு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 300 கி.மீ. சுற்றுப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சுனாமி அலைகள் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸை ஆகிய நாடுகளையே சிறிய அளவில் தாக்கலாம் என்றும், இந்தியா- அந்தமானுக்கு பாதிப்பு இருக்காது என்றும் தெரிகிறது.
இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கோடா டெர்னேட் என்ற தீவின் வட மேற்கே 154 கி.மீ. தூரத்தில் கடலுக்கு அடியில் 47 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை உயிர்ச் சேதங்கள், பொருட் சேதங்கள் குறித்து தகவல் ஏதும் இல்லை.
ஆனால், இந்த மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கோடா டெர்னேட் தீவுக்கு 300 கி.மீ. சுற்றளவை சுனாமி அலைகள் தாக்கலாம் என்று பசிபிக் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது. இதனால் இந்தோனேஷியா, பிலிப்பைன்சின் சில பகுதிகளே பாதிப்புக்கு உள்ளாகும்.
கடலுக்கு அடியில் மிக ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகளின் உயரமும் 1 மீட்டருக்குக் குறைவாகவே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
7.3 quake in eastern #Indonesia, Tsunami warning issued
— Doordarshan News (@DDNewsLive) November 15, 2014
2004ம் ஆண்டில் இந்தேனேஷியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பாண்டா அசேவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தியப் பெருங்கடலில் பெரும் சுனாமி அலைகள் உருவாகி அந்தமானை தாக்கியதோடு இந்தியாவையும் தாக்கின. இதில் தமிழகத்திலும் இலங்கையிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாயினர்.
ஆனால், இம்முறை இந்தோனேஷியாவுக்கு கிழக்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுனாமி அலைகளும் பசிபிக் கடலில் தான் பரவ உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.