கங்கிராஜுலேஷன்ஸ்.. பூமிக்கு 2 தம்பிப் பாப்பா இருக்காம்..!
மியாமி: அச்சு அசல் பூமியைப் போலவே உள்ள ஒரு 2 கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுதொடர்பான ஆய்வுகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உயிரினங்கள் வாழக் கூடிய தன்மையுடன் கூடியதாக கருதப்படும் எட்டு புதிய கிரகங்களை தற்போது நாசா கண்டுபிடித்துள்ளது.
இந்த எட்டு கிரகங்களில் இரண்டு கிரகங்கள் கிட்டத்தட்ட பூமியைப் போலவே இருப்பதாகவும் கருதப்படுகிறது.
சூரியக் குடும்பத்துக்கு வெளியே:
சூரிய குடும்பத்திற்கு வெளியே இதுவரை பூமியைப் போன்ற எந்த கிரகமும் கண்டுபிடிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞானிகள் தகவல்:
சியாட்டில் நகரில் நடந்த அமெரிக்க விண்வெளிக் கழகத்தின் 225 ஆவது மாநாட்டின்போதுதான் விஞ்ஞானிகள் இந்தத் தகவலைத் தெரிவித்தனர்.
குளிரும், வெப்பமும்:
பூமியைப் போல உள்ளதாக கருதப்படும் இந்த இரண்டு கிரகங்களிலும் கடினமான பாறைகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவற்றைச் சுற்றியுள்ள நட்சத்திரங்கள் மிகவும் குளிராக அல்லது மிகவும் வெம்மையாக இருக்கலாம் என்று தெரிகிறது.
தண்ணீர் தண்ணீர்:
மேலும் இந்த கிரகங்களில் தண்ணீர் இருக்கலாம் என்றும் அங்கு உயிரினங்கள் இருக்கக் கூடும் என்றும் நம்பப்படுகிறது.
கோல்டிலாக்ஸ் நட்சத்திர மண்டலம்:
இந்த புதிய கிரகங்கள், கோல்டிலாக்ஸ் நட்சத்திர மண்டலக் கூட்டத்திற்கு மத்தியில் இருப்பதாகவும் கூறியுள்ளனர் விஞ்ஞானிகள்.
பூமியின் சாயல்:
இதுகுறித்து கெப்ளர் அறிவியல் அலுவலக விஞ்ஞானி பெர்கல் முல்லாலி கூறுகையில், "நாம் இப்போது பூமியின் இரட்டையரை நெருங்கி விட்டோம். இது மிகப் பெரிய விஷயமாகும்.இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சூரிய குடும்பத்திற்கு அப்பாற்பட்ட கிரகங்களில், இந்த இரண்டும்தான் பூமியைப் போல உள்ளவையாகும்.
தொடர்ச்சியான ஆய்வு:
நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் இந்த புதிய கிரகங்களை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த தொலைநோக்கியானது, சூரியக் குடும்பத்திற்கு அப்பால் உள்ள கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் நட்சத்திரங்களை தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது 2009 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
சூரியனுக்கு சற்று தொலைவில்:
தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 8 கிரகங்களில், 3 கிட்டத்தட்ட பூமியின் சாயலை ஒத்துள்ளதாம். இந்த மூன்றுமே அவற்றின் சூரியனுக்கு சற்று தொலைவில் உள்ளன.
மற்றொரு பூமி:
அதில் இரண்டு கிரகங்கள் பூமியைப் போலவே பாறைகளால் ஆனது போல உள்ளது. எனவேதான் இந்த இரண்டு கிரகங்களும் இன்னொரு பூமியாக இருக்கலாம் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு வந்துள்ளது.