டெய்லி அரை மணி நேரம் வாக்கிங் போனா.. 7 வருஷம் கழிச்சு ‘ராசாத்தி’ ஆகலாம்!
லண்டன்: தினந்தோறும் சுமார் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு, இளமை மேலும் ஏழு ஆண்டுகள் நீட்டிப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும் என்றும் இளமையாகவே இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால், நிஜத்தில் அது சாத்தியமல்ல. காலச்சக்கரம் சுற்றச் சுற்ற வயது ஏறிக் கொண்டே செல்லும், இளமையும் காணாமல் போகும்.
ஆனால், தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சி செய்தால், ஆயுள் கூடும் இளமையாக மேலும் சில ஆண்டுகள் வளைய வரலாம் என புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
தொடர்ச்சியாக உடற்பயிற்சி...
ஐரோப்பிய இதயவியல் குழுமத்தில் சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்தால், மாரடைப்பினால் ஏற்படும் பாதிப்பு, சரிபாதிக்கும் அதிகமாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முதுமையை தள்ளிப் போடலாம்...
இந்த ஆய்விற்கு தலைமை தாக்கிய பேராசிரியர் சஞ்சய் சர்மா கூறுகையில், ‘முதுமை தவிர்க்க முடியாத ஒரு பருவம் என்றாலும், அதனை தள்ளிப்போட இதுபோன்ற உடற்பயிற்சிகள் அவசியம்' எனத் தெரிவித்துள்ளார்.
ஆயுளை நீட்டிக்கலாம்...
மேலும், நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சி மூலம் சுமார் மூன்று முதல் ஏழாண்டுகளை நமது வாழ்நாளை அதிகரிக்க முடியும் எனத் தெரிவித்துள்ள சஞ்சய் சர்மா, மன அழுத்தம், புரிதிறன் செயல்பாட்டை இது கூட்டுவதால் 'டிமென்ஷியா' போன்ற மறதி நோய் உண்டாவதையும் தடுக்கலாம் என்கிறார்.
ஆலோசனை...
இது தவிர இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு புதிய ஆலோசனை ஒன்றைக் கூறுகிறார் சஞ்சய். அதாவது, இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், ஓட்டப் பயிற்சி செய்யக்கூடாது, மாறாக மற்றவர்களிடம் பேச முடியும் வேகத்தில் நடக்க வேண்டும். அதற்காக, பாடக்கூடிய அளவிலான வேகத்தில் நடக்கக் கூடாது' எனக் கூறுகிறார்.
வருமுன் காக்கலாம்...
மேலும் இந்த ஆய்வின் மூலம் எழுபது வயதில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர், பொதுவாக 80 வயதில் இதய துடிப்பில் ஏற்படும் இடையூறுப் பிரச்சனையில் இருந்து தம்மை காத்துக்கொள்ள முடியும் எனத் தெரிய வந்துள்ளது.