10 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடைகளுக்கு சொந்தக்காரியான குட்டி குழந்தை “அவயா” - காரணம் இன்ஸ்டாகிராம்!
லண்டன்: லண்டனைச் சேர்ந்த குட்டிக் குழந்தை ஒன்று இன்ஸ்டாகிராமில் மாடலாக கலக்கி வருகின்றது. அந்தக் குழந்தைக்குச் சொந்தமாக 10,000 பவுண்ட்கள் அதாவது இந்திய மதிப்பில் கிட்டதட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் உள்ளனவாம்.
அவயா ஹியூகோ என்கிற ஒன்றரை வயதுக் குழந்தை அணிவதற்கான உடைகளை சுமார் ஐநூறு ஆடை வடிவமைப்பாளர்களால் ஆசையாக உருவாக்கப்படுகின்றன.
இவளுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும், பெரிய நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன.
60 ஆயிரம் பாலோயர்கள்
இன்னும் மழலை மொழி கூட பேசத் துவங்காத அவயாவின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் 60,000 பேர் இவரை பின் தொடர்கின்றனர்.
போஸ் கொடுக்க ரொம்பப் பிடிக்கும்
இதற்கெல்லாம் காரணம் அவயாவின் அம்மா கார்லி ஆஸ்டன்தான். எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் அவயாவுக்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க மிகவும் பிடிக்குமாம்.
இன்ஸ்டாகிராமில் வெளியீடு
அதனால் மூன்று மாதக் குழந்தையாக இருந்ததிலிருந்து அவளை அலங்கரித்து எடுக்கும் புகைப்படங்களை அம்மா கார்லி இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.
மாடலாக கலக்கல்
இதனை பெரிய நிறுவனங்களும் பயன்படுத்திக் கொண்டு அவர்களது மாடலாக இருக்கும் இந்த குட்டி அழகிக்கு இலவசமாக உடைகளை வழங்கி அணியவைத்து அழகு பார்க்கின்றனர்.
என் குழந்தை எல்லாருக்குமே அழகு
"எல்லா குழந்தைகளும், அவரவர் அம்மாவுக்கு அழகு எனத் தோன்றுவது வழக்கம்தான். ஆனால், என் குழந்தை அனைவருக்குமே அழகாகத் தெரிகிறாள்" என பெருமையாகக் கூறுகிறார் கார்லே. அவயாவுக்கு இப்போது ஆறு மாதத் தங்கை இருக்கின்றாள் என்பது குறிப்பிடத்தக்கது.