ப்ப்பா.. என்னா குளிரு, பரவாயில்லை மறக்காம கல்யாணத்திற்கு வந்துருங்க.. அண்டார்டிகாவில் ஒரு சாகசம்!
மனிதன் வாழ்வதற்கான சாதகமான சூழல் இல்லாத அண்டார்டிகாவில் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஆய்வு ஜோடி திருமணம் செய்து கொள்ளப் போகிறது.
லண்டன்: பனிப்பிரதேச கண்டமான அண்டார்டிகாவில் முதல் முறையாக பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளனர்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். அனைவருக்குமே திருமணம் என்பது மறக்க முடியாத நிகழ்வுதான். சிலர் ஆடம்பரமாகவும், மேலும் சிலர் வசதியிருந்தாலும் எளிமையாகவும் நடத்துவர்.
மேலும் சிலரோ வானில் பறந்தபடியே திருமணம் செய்வது, கப்பலில் திருமணம் செய்வது, நடு கடலில் திருமணம் செய்வது என்று சாதனைகளை புரிவர். ஆனால் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஆய்வு ஜோடி எப்படி திருமணம் செய்து கொள்ளவுள்ளார்கள் தெரியுமா? பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில்....
குளிர்பிரதேசம்
புவியின் தென் துருவமான அண்டார்டிகா முற்றிலும் பனிப்பாறைகளால் ஆனது. இங்கு மைனஸ் 9 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதால் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இங்கு இல்லை.
ஆராய்ச்சிகள்
இருந்தாலும், பல்வேறு நாடுகளின் ஆராய்ச்சி மையங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. அதில் ஆராய்ச்சியாளர்கள் தங்கியிருந்து தங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள பிரிட்டிஷ் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் பிரிட்டனைச் சேர்ந்த டாம் சில்வெஸ்டர் மற்றும் ஜூலி பவ் ஆகிய இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
வித்தியாச திருமணம்
அதன்படி தங்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் செய்து கொள்ள விரும்பியது இந்த ஜோடி. அண்டார்டிக் கண்டத்தின் மேற்கில் இருக்கும் அடேய்லயீட் தீவில் உள்ள ரோதரா ஆராய்ச்சி நிலையத்தில் உறைய வைக்கும் குளிரில் இந்த வார இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த சிறப்பு மிக்க திருமணத்தை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பால் சாம்வெஸ் நடத்தி வைக்க இருக்கிறார்.
திருமண விருந்தும்...
திருமண வைபோகத்தில் ஷாம்பெயினுடன் கூடிய காலை உணவும், இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஆனால், சிறு குறையாக மணமக்களின் பெற்றோர்களோ, உறவினர்களோ திருமணத்தில் கலந்து கொள்ள முடியாது என்பது தான் வருத்தம் தரக்கூடிய விஷயமாக உள்ளது.
ஒருவரை ஒருவரை கவருவதற்காக வழக்கமாக "ஐஸ்" வைப்பார்கள்.. இவர்கள் ஐஸ் கட்டிகளுக்கு மத்தியில் கல்யாணம் செய்யயப் போகிறார்கள்!