நடத்தையில் சந்தேகம்... மனைவி காதுகளை துண்டித்த கணவன்... ஆப்கனில் அதிர்ச்சி
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவர் ஒருவர் மனைவியின் காதுகளை துண்டித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தானில் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரின் 2 காதுகளையும் கணவரே துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இனி கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பெண் ஒருவரின் காதுகளை கணவரே அறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கஜிண்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜெரினா. தற்போது 23 வயதை தொட்டுள்ள இவருக்கு 13 வயதிலேயே திருமணமாகிவிட்டது.
குழந்தைகள் சகிதமாக வாழ்ந்து வரும் இவரை, அவரது கணவர் தாய்வீட்டுக்கு கூட அனுப்பாமல் அடிமைப் போல் நடத்தி வந்துள்ளார். ஜெரினாவின் நடத்தை மீதும் சந்தேகம் கொண்ட அவர், ஜெரினாவை அடிக்கடி அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஜெரினா மீதான சந்தேகம் முற்றவே ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கடுமையாக தாக்கியதோடு அவரின் இரண்டு காதுகளையும் அறுத்து துண்டித்துள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெரினா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தவறு ஏதும் செய்யாத தன்னை தனது கணவர் நாள்தோறும் சித்ரவதை செய்வதாக கூறிய ஜெரினா இனி ஒரு போதும் அவருடன் சேர்ந்து வாழ மாட்டேன் என தெரிவித்துள்ளார்.