பெஷாவர் நகரமெங்கும் மரணஓலங்கள்... காணும் இடமெங்கும் இறுதிச்சடங்குகள்
பெஷாவர்: தாலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு நடைபெற்று வரும் இறுதிச்சடங்குகளால் பெஷாவர் நகரமே சோகமயமாக காட்சியளிக்கிறது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இயங்கி வந்த ராணுவப் பள்ளிக்குள் நேற்று புகுந்த தாலிபான் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர வெறியாட்டத்தில் 132 பள்ளி மாணவர்கள் உட்பட 141 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.
தாலிபான் பயங்கரவாதிகளின் கோர தாண்டவத்திற்கு பலியான பச்சிளம் சிறார்களின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நகரம் முழுவதும் பல இடங்களில், இன்று செய்யப்பட்டு வருகிறது.
செவ்வாயன்று பள்ளிக்கு சீருடை அணிவித்து அனுப்பிய குழந்தைகளை, இன்று அவர்களது பெற்றோர் இறுதிச் சடங்குக்கு கண்ணீருடன் தயார் செய்து கொண்டிருக்கும் நிலையைக் கண்டு உறவினர்களும், அக்கம் பக்கத்தில் வாழ்வோரும், நண்பர்களும் கதறி அழுகின்றனர்.
எங்கும் சோகமே உருவாகக் காட்சி அளிக்கிறது பெஷாவர் நகரம். ஒரு நகரத்தில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது. பாகிஸ்தானில் இந்த சம்பவத்தை அடுத்து 3 நாட்கள் துக்க தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.