தமிழக விவசாயிகளை மோடி சந்திக்க வேண்டும்... அபுதாபி தமுமுக செயற்குழு கோரிக்கை
அபுதாபி: பிரதமர் மோடி தமிழக விவசாயிகளை சந்தித்து விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என அபுதாபியில் நடந்த தமுமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அபுதாபி மண்டல தமுமுகவின் செயற்குழு 14/04/2017 வெள்ளி மாலை 6 மணியளவில் அபுதாபி தமுமுக மர்கஸில் மண்டல பொருளாளர் அபுல் ஹசன் தலைமையில் அமீரக தமுமுக துணைச்செயலாளர் டாக்டர் அப்துல் காதர் முன்னிலையில் துவங்கியது.
மூத்த நிர்வாகி சகோதரர் பஷீர்முஹம்மது கிராத் ஓதினார். அதைத்தொடர்ந்து அபுதாபி மண்டல மமக செயலாளர் அல்அமீன் மற்றும் மண்டல தமுமுக துணைச்செயலாளர் சேக்தாவுது ஆகியோரின் சிற்றுரையோடு சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட மவ்லவி கொள்ளுமேடு ரிபாய், பொறுப்பாளர்களின் ஒழுங்கினங்கள் குறித்த சிறப்புரையோடு முதல் அமர்வு முடிவுற்றது.
மஹரிப் தொழுகைக்கு பிறகு இரண்டாம் அமர்வு தொடங்கியது. அபுதாபி தமுமுக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மண்டல தலைவராக பரங்கிப்பேட்டை அபுல் ஹசன், மண்டல செயலாளராக அடியக்கமங்கலம் சேக்தாவுது (அபுசபிஹா), மண்டல மமக செயலாளராக அடியக்கமங்கலம் அல்அமீன், மண்டல பொருளாளராக சிதம்பரம் சுஜாவுதீன், துணைத் தலைவராக சித்தையாங்கோட்டை ஹாஜா நஜ்முதீன், துணைச் செயலாளர்களாக ஆயங்குடி ஹபிபுல்லா, ஆத்தங்கரை நஜ்முதீன், பொறையார் ஜஹாங்கீர் ஆகியோரும், தாவாக்குழு (IPP) பொறுப்பாளர்களாக திருச்சி சர்தார், வாலிநோக்கம் பீர்முஹம்மது, பின்னத்தூர் முஹம்மது ராபி ஆகியோர் ஏகமானதாக தேர்வு செய்யப்பட்டனர்.
அமீரக தமுமுக துணைச்செயலாளர் டாக்டர் அப்துல்காதர் எழுச்சிமிகு உரையை நிகழ்த்தினார்.
இந்திய பிரதமர் மோடி அவர்கள் தமிழக விவசாயிகளை சந்தித்து விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என இந்த செயற்குழுவின் வாயிலாக வேண்டுகோள் விடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மண்டல துணைத்தலைவர் ஹாஜா நஜ்முதீன் நன்றியுரையோடு இறுதி துஆவோடு செயற்குழு இனிதே முடிவுற்றது.