அமெரிக்காவில் ஒரே வாரத்தில் மற்றொரு பயங்கரம்.. இந்திய தொழிலதிபர் சுட்டுக் கொலை
தெற்கு கரோலினா பகுதியில் தொழிலதிபர் ஹர்னிஷ் பட்டேல் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். லன்காஸ்டர் பகுதியில் தனது நிறுவனத்தை மூடிவிட்டு வீட்டுக்கு கிளம்பியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், இந்திய இன்ஜினியர் சீனிவாஸ் என்பவர் கன்சாஸ் பாரில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பிற நாட்டு வெறுப்பின் அடிப்படையில் இந்த கொலை நடந்ததாக தெரியவந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின், வெறுப்பு பிரசாரங்களின் விளைவுதான் இக்கொலை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ட்ரம்ப் அக்கொலையை கண்டித்தார். ஆனாலும், அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் தெற்கு கரோலினா பகுதியில் தொழிலதிபர் ஹர்னிஷ் பட்டேல் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். லன்காஸ்டர் பகுதியில் தனது நிறுவனத்தை மூடிவிட்டு வீட்டுக்கு கிளம்பியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவ இடத்தில் துப்பாக்கி சூடு சத்தமும், ஒருவர் அலறும் சத்தமும் கேட்டதாக ஏரியாவாசிகள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு வந்து சேருவதற்குள் பட்டேல் உயிரிழந்துவிட்டார். அந்த பகுதியில் சிசிடிவி காமிராக்களை போலீசார் சோதனை செய்துவருகிறார்கள். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டபோதிலும், அதனால் எந்த விவரமும் கிடைக்கவில்லை.
இது இன ரீதியாக அல்லது பிற நாடுகள் மீதான வெறுப்பின் காரணமாக செய்யப்பட்ட கொலை என்பதை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், அடுத்தடுத்து இந்தியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.