ஒ மை காட்.. வட கொரியா விட்ட ஏவுகணை.. 10 நிமிட "கேப்"பில் தப்பிய ஏர் பிரான்ஸ்!
பியாங்யாங்: வட கொரியா ஏவிய ஏவுகணை ஒன்று ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானத்திற்கு 100 கிலோமீட்டர் அருகே பறந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஹுவாசாங் 14 ஏவுகணையாகும். இதை ஜூலை 28ம் தேதி வட கொரியா ஏவிப் பரிசோதித்தது. இதன் பிறகுதான் ஒட்டுமொத்த அமெரிக்காவும் எங்களது விரலுக்குக் கீழே என்று சவால் விட்டிருந்தார் வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன்.
தற்போது அந்த ஏவுகணை சோதனையின்போது நடந்த ஒரு பரபரப்புச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விமானத்துக்கு அருகே
வட கொரிய ஏவுகணை கடந்த பகுதியில்தான் சில நிமிட இடைவெளியில் டோக்கியா - பாரீஸ் இடையிலான ஏர் பிரான்ஸ் விமானம் வந்துள்ளது. கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் இடைவெளியில் விமானமும், ஏவுகணையும் மோதுவதிலிருந்து தப்பித்துள்ளன.
330 பேருடன்
அந்த ஏர் பிரான்ஸ் விமானம் 330 பேருடன் வந்துள்ளது ஜஸ்ட் மிஸ் என்பது போல ஏர்பிரான்ஸ் விமானம் தப்பித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
10 நிமிடத்தில்
ஏவுகணை விழுந்த கடல் பகுதியை ஏர் பிரான்ஸ் விமானம் 10 நிமிடம் கழித்து கடந்து சென்றுள்ளது. ஒரு வேளை 10 நிமிடத்திற்கு முன்பு அது கடந்திருந்தால் நிச்சயம் ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கும்.
சுதாரித்தது ஏர் பிரான்ஸ்
இந்த சம்பவத்தையடுத்து தனது வி்மானங்கள் செல்லும் பகுதியை மாற்றியமைத்து அறிவித்துள்ளது ஏர் பிரான்ஸ் நிறுவனம். முன்னெச்சரிக்கையாக இதை செய்துள்ளதாக அது அறிவித்துள்ளது.
கண்டுக்காத வட கொரியா
வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தும் பகுதியில் அதிக அளவில் விமானங்கள் செல்வது வழக்கம். எனவே அங்கு சோதனை நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா பலமுறை எச்சரித்தும் கூட வட கொரியா அதைக் காதில் போட்டுக் கொள்வதில்லை.
உக்ரைன் சம்பவத்தை மறக்க முடியுமா?
இப்படித்தான் 2014ம் ஆண்டு ஜூலை மாதம் கிழக்கு உக்ரைனிலிருந்து ஏவப்பட்ட ரஷ்ய தயாரிப்பு பக் ஏவுகணை தாக்கி ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தகர்க்கப்பட்டது. அதில் பயணம் செய்த 283 பேரும் பரிதாபமாக கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.