துணை விமானியின் மன அழுத்தம் பற்றி எங்களுக்கு ஏற்கனவே தெரியும்: லுப்தான்ஸா
டுசல்டார்ப்: ஜெர்மன்விங்ஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய துணை விமானி லுபிட்ஸுக்கு மன அழுத்த பிரச்சனை இருந்தது தங்களுக்கு ஏற்கனவே தெரியும் என லுப்தான்ஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.
லுப்தான்ஸா நிறுவனத்தின் கிளையான ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்தில் துணை விமானியாக பணிபுரிந்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28). அவர் ஸ்பெயினில் இருந்து ஜெர்மனி சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானத்தை ஆல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளாக்கினார். இதில் அவர் உள்பட விமானத்தில் இருந்த 150 பேர் பலியாகினர்.
லுபிட்ஸ் மன அழுதத்தால் அவதிப்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து லுப்தான்ஸா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மன அழுத்தம்
லுபிட்ஸ் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்ததும் எங்களுக்கு தெரியும். விமானி பயிற்சி படிப்பு படிக்கையில் அவர் பல மாதங்கள் விடுப்பில் சென்றுவிட்டு மீண்டும் வந்தார். அப்போது தான் அவர் தனது நிலைமை குறித்து இமெயில் மூலம் விளக்கம் அளித்திருந்தார் என்று லுப்தான்ஸா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி
மன ரீதியான பிரச்சனைகள் இருந்த லுபிட்ஸை ஏன் மீண்டும் பயிற்சியில் சேர்த்து அவரை விமானத்தை இயக்க லுப்தான்ஸா அனுமதித்தது என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தற்கொலை
லுபிட்ஸுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அடிக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த பிரச்சனைக்காக அவர் சிகிச்சை பெற்றுள்ளார் என ஜெர்மனி சட்ட பிரதிநிதி திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். ஆனால் லுபிட்ஸுக்கு அந்த பிரச்சனை எப்பொழுது ஏற்பட்டது, எந்த வகையான சிகிச்சை பெற்றார் என்பதை தெரிவிக்கவில்லை.
லுப்தான்ஸா
லுபிட்ஸுக்கு விமானத்தை இயக்கும் தகுதி இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை அவர் மறைத்துவிட்டார். இந்நிலையில் லுபிட்ஸ் விமானத்தை இயக்க 100 சதவீதம் தகுதியானவர் என்று ஜெர்மன்விங்ஸ் தெரிவித்ததாக முன்னாள் விமானி கார்ஸ்டன் ஸ்போஹ்ர் தெரிவித்துள்ளார்.