அமெரிக்க தாக்குதலில் அல் கொய்தா இந்திய கிளையின் தலைவர் பலி
வாஷிங்டன்: அல் கொய்தாவின் இந்திய துணை கண்டத்தின் தலைவர் அகமது பரூக் பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பலியாகியுள்ளார்.
அல் கொய்தா தீவிரவாத அமைப்பு இந்திய துணை கண்டத்தில் புதிய கிளையை துவங்கப் போவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து இந்திய துணை கண்ட கிளையின் தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய துணை கண்ட கிளையை துவங்கிய பிறகு அல்கொய்தா தீவிரவாதிகள் பாகிஸ்தான் கடற்படையில் ஊடுறுவி ஒரு கப்பலை கடத்த முயற்சி செய்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானில் உள்ள ஷவால் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அல் கொய்தாவின் இந்திய கிளையின் துணை தலைவர் அகமது பரூக் கொல்லப்பட்டார். மேலும் அல் கொய்தாவால் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் வெய்ன்ஸ்டீன் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ஜியோவானி லோ போர்தோ ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
ஜனவரி மாதம் அவர்கள் கொல்லப்பட்டது பற்றி தற்போது தான் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அல் கொய்தா இந்திய கிளையின் செய்தித் தொடர்பாளர் ஒசாமா மகமூது கூறுகையில்,
கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி ஷவால் பள்ளத்தாக்கில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் அல் கொய்தா தலவைர்கள் அகமது பரூக் மற்றும் காரி அப்துல்லா மன்சூர் ஆகியோர் கொல்லப்பட்டனர் என்றார். அகமது பரூக் ஒரு அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.