48 மணி நேரத்தில் 52 லட்ச ரூபாய்- திருடன் தள்ளிவிட்ட மனிதருக்கு குவிந்த உதவிகள்
லண்டன்: இங்கிலாந்தில் திருடனால் பாதிக்கப்பட்ட நபருக்கு 48 மணி நேரத்தில் கிட்டதட்ட 52 லட்ச ரூபாய் மக்களிடம் இருந்து உதவித்தொகையாக குவிந்துள்ளது.
இங்கிலாந்தின் வடக்கு டினிசைட் கவுன்டியை சேர்ந்தவர் ஆலன் பர்னஸ். பார்வை மற்றும் வளர்ச்சி குறைபாடுடன் பிறந்தவர். நாலு அடி உயரமும் 38 கிலோ எடையும் கொண்ட இவர் கடந்த புதன்கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்ம நபரால் தாக்கப்பட்டார்.
பணம் இருக்கும் என்று நினைத்து தாக்க ஆரம்பித்த திருடன் இவரது பாக்கெட்டில் பணம் இல்லாதது தெரிந்ததும் இவரை கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளான்.
இந்த தாக்குதலால் ஆலனின் கழுத்து எலும்பு உடைந்தது. கடும் வலியால் அவதிப்பட்ட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஒரு பத்திரிகை அவரிடம் பேட்டி எடுத்தது.
இதயமற்ற ஒருவனால் கடுமையாக தாக்கப்பட்ட பின்னும் அவர் அந்த பேட்டியில் தைரியமாக பேசிய விதம் பல வாசகர்களை கவர்ந்தது. அதே நேரம் இவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அறிந்த அனைவரும் அவரது நிலைமையை எண்ணி வருந்தினர்.
இந்நிலையில் ஆலனுக்கு உதவும் நோக்குடன் கேத்தி கட்லர் என்பவர் இணையதளம் ஒன்றில் "ஆலன் பர்னஸ் பண்ட்" என்ற பக்கத்தை தொடங்கினார். ஆச்சர்யமாக 48 மணி நேரத்திற்குள் 50000 பவுண்டு அதாவது இந்திய மதிப்பில் கிட்டதட்ட 52 லட்ச ரூபாய் நிதி கிடைத்துள்ளது.
இது குறித்து பேசிய ஆலன் "இது போன்ற சம்பவம் யாருக்கும் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் நான் அந்த பேட்டியை கொடுத்தேன். இதை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த உதவியை செய்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
தற்போது இங்கிலாந்தின் வடக்கு டினிசைட்டில் உள்ள அவரது அக்காவின் பராமரிப்பில் ஆலன் பர்னஸ் இருந்து வருகிறார்.