என்னை நிர்ப்பந்தப்படுத்தி வெளியேற்றியுள்ளனர், திரும்பிப் போகும் திட்டமே இல்லை.. மல்லையா பேட்டி
லண்டன்: இந்தியாவை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தத்தை எனக்கு ஏற்படுத்தியதால்தான் நான் வெளியேற நேரிட்டது. இப்போதைக்கு இங்கிலாந்தை விட்டு வெளியேறும் திட்டம் என்னிடம் இல்லை என்று கூறியுள்ளார் தொழிலதிபர் விஜய் மல்லையா.
இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார் மல்லையா. தற்போது அவரது பாஸ்போரா்ட்டை மத்திய அரசு முடக்கியுள்ளது.
மேலும் அவரை நாடு கடத்திக் கொண்டு வரும் வேலைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து அரசுக்கு இந்தியா கடிதமும் எழுதியுள்ளது. இதுதவிர மும்பை கோர்ட்டும் அவருக்கு எதிராக கைது வாரண்ட்டைப் பிறப்பித்துள்ளது.
நிர்ப்பந்தம்...
இந்த நிலையில் தான் நாடு திரும்பப் போவதில்லை என்று மல்லையா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பினான்ஷியல் டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், "நான் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளேன்.
திட்டமில்லை...
என்னை நாட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு நிலையை ஏற்படுத்தி விட்டனர். நான் இங்கிலாந்தை விட்டு வெளியேறும் திட்டமே இல்லை.
வங்கிகளுடன் உடன்பாடு...
வங்கிகளுடன் நியாயமான உடன்பாட்டை எட்ட விரும்புகிறேன். நாங்கள் தொடர்ந்து வங்கிகளுடன் பேசித்தான் வந்தோம். அவர்களும் உடன்பாடு காண விரும்புவதாகவே கூறி வந்தனர். ஆனால் நியாயமான உடன்பாட்டையே நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார் மல்லையா.
கடிதம்...
மல்லையாவை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ள நிலையில், அவரது இந்தப் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து குடிமகன்...
இதற்கிடையே, தற்போது இங்கிலாந்தில் உள்ள மல்லையா, அந்நாட்டு குடிமகனாவே மாறி, வாக்காளர் பட்டியலிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.